திருச்சிற்றம்பலம்,
தஞ்சை மாவட்டம் திருச்சிற்றம்பலம் அருகே உள்ள களத்தூர் கிழக்கு கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன்(வயது 50). ராணுவ வீரரான இவர், காஷ்மீரில் 117-வது பட்டாலியன் படை பிரிவில் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் ராமச்சந்திரன் பணியில் இருந்தபோது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு அவர் மரணமடைந்தார். இது குறித்து அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த ராமச்சந்திரன் குடும்பத்தினர் அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
தற்போது கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் ராணுவ வீரர் ராமச்சந்திரன் உடலை ஊருக்கு கொண்டு வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. எனவே அவரது குடும்பத்தினர் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர்.
ராமச்சந்திரனுக்கு சீதாலட்சுமி என்ற மனைவியும் 1 மகனும், 1 மகளும் உள்ளனர். ராணுவ வீரர் ராமச்சந்திரன் மரணம் அவரது சொந்த ஊரான களத்தூர் கிழக்கு கிராம மக்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.