பத்மநாபபுரம்,
குமாரபுரம் அருகே கல்குவாரியில் பாறாங்கற்கள் விழுந்து தொழிலாளி இறந்தார்.
தொழிலாளி சாவு
குமரி மாவட்டம் குமாரபுரம் அருகே சாண்டம் பகுதியில் ஒரு கல்குவாரி உள்ளது. இந்த கல்குவாரியில் தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே வலசை பகுதியை சேர்ந்த இதயகனி (வயது 55) என்பவர் கடந்த 5 மாதங்களாக வேலை பார்த்து வந்தார். இந்தநிலையில் நேற்று காலை கல்குவாரியில் பணியில் ஈடுபட்ட போது பாறையின் மேல்பகுதியில் இருந்த கற்கள் உடைந்து இதயகனியின் தலையில் விழுந்ததுள்ளது. இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
உடனே அவரை சக தொழிலாளர்கள் மீட்டு சிகிச்சைக்காக தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.
மேலும் இதுபற்றி தகவல் அறிந்ததும் கொற்றிக்கோடு (பொறுப்பு) இன்ஸ்பெக்டர் நெப்போலியனின் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.