புதுக்கோட்டை:
தீ வைத்து எரிப்பு
புதுக்கோட்டையை சேர்ந்தவர் மனோகர் பாண்டி (வயது 26). இவர் 31 வயதுடைய பெண்ணை காதலித்து வந்தார். அந்த பெண்ணுடன் மனோகர் பாண்டி திருமணம் செய்யாமல் திருக்கோகர்ணம் பகுதியில் புதுத்தெருவில் ஒரு வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் அந்த பெண்ணுக்கு வேறு ஒரு நபருடன் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் காதலியின் நடவடிக்கையில் அவருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அவரை விட்டு பிரிந்தார். இந்த நிலையில் அந்த பெண் தங்கியிருந்த வீட்டிற்கு மனோகர் பாண்டி தீ வைத்தார். இதில் வீட்டின் படுக்கை அறை மெத்தை, டி.வி. உள்ளிட்டவை தீப்பிடித்து எரிந்து நாசமானது.
கைது
இந்த சம்பவம் குறித்து அந்த பெண் திருக்கோகர்ணம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மனோகர் பாண்டியை கைது செய்தனர். காதலி தன்னை விட்டு பிரிந்ததால் அவர் ஆத்திரத்தில் இந்த செயலில் ஈடுபட்டது தெரியவந்தது.