கூட்டம்
உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகளின் உத்தரவுப்படி சீமை கருவேல மரங்களை அகற்றும் பணிகளை அரசுத்துறை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.
உடுமலை நகராட்சி பகுதியில் சுமார் 60 ஏக்கர் பரப்பளவிற்கு சீமை கருவேல மரங்கள் உள்ளதாக நகராட்சி நிர்வாகத்தால் கண்டறியப்பட்டு சேவை நிறுவனங்களின் பங்களிப்புடன் இதுவரை 46 ஏக்கர் பரப்பளவிற்கு சீமை கருவேல மரங்கள் வெட்டி அகற்றப்பட்டதாக நகராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். இதுபோன்று ஊராட்சி பகுதியில் பொதுப்பணித்துறை உள்ளிட்ட அரசு துறையினரும் சீமை கருவேல மரங்களை வெட்டி அகற்றி வருகின்றனர். இந்த நிலையில் உடுமலை பகுதியில் சீமை கருவேல மரங்களை அகற்றும் பணியின் முன்னேற்ற நிலை குறித்து திருப்பூர் 2-வது கூடுதல் மாவட்ட நீதிபதி ஜியாவூதீன் உடுமலையில் ஆய்வுகூட்டத்தை நடத்தினார்.
நீதிபதி ஆய்வு
நீதிபதி ஜியாவூதீன் தலைமையில் உடுமலை சப்-கோர்ட்டில் நடந்த ஆய்வு கூட்டத்திற்கு சப்-கோர்ட்டு நீதிபதி சுரேஷ், மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி ரகுபதிராஜா, மாஜிஸ்திரேட்டுகள் ஸ்ரீவித்யா, கிருஷ்ணபிரியா ஆகியோர் முன்னிலைவகித்தனர். கூட்டத்தில் நகராட்சி, வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, உள்ளாட்சித்துறை அதிகாரிகள் கலந்துகொண்டு சீமைகருவேல மரங்கள் வெட்டப்பட்டுள்ளதன் முன்னேற்ற பணிகளின் நிலைகுறித்து எடுத்துரைத்தனர்.
இதனைத்தொடர்ந்து நீதிபதி ஜியாவூதீன், பெரியார்நகர், ராஜலட்சுமிநகர், பொள்ளாச்சி சாலை உள்ளிட்ட சீமை கருவேல மரங்கள் வெட்டி அகற்றப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். அவருடன் உடுமலை நீதிபதிகள், மாஜிஸ்திரேட்டுகள், அரசுத்துறை அதிகாரிகள் ஆகியோரும் சென்றனர்.