குடிநீர் கேட்டு அவினாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்

குடிநீர் கேட்டு அவினாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டனர்.
குடிநீர் கேட்டு அவினாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்
Published on

அவினாசி,

திருப்பூர் மாவட்டம் அவினாசி ஊராட்சி ஒன்றியத்தில் 31 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் நூற்றுக்கணக்கான கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. கால சூழ்நிலை காரணமாக பருவ மழை சரி வரஇல்லாததால் விவசாய தொழில் நாளுக்கு நாள் நலிவடைந்து வருகிறது.

மேலும் அவினாசி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஏராளமான குளம், குட்டைகள், கிணறுகள், அனைத்தும் வறண்டு கிடக்கின்றன. கால்நடைகளுக்கு கூட குடிப்பதற்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பொதுமக்களுக்கும் சரிவர குடிநீர் கிடைக்காததால் தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் அவினாசி ஒன்றியம் உப்பிலிபாளையம் மற்றும் மோரப்பாளையத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான பெண்கள் குடிநீர் கேட்டு நேற்று காலிக்குடங்களுடன் அவினாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு வந்து முற்றுகைப் போராட்டம் நடத்தினார்கள். பின்னர் அவர்கள் ஊராட்சி ஒன்றிய ஆணையாளரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியதாவது:-

எங்கள் ஊராட்சி பகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. நாங்கள் கூலி வேலை செய்து வாழ்க்கை நடத்தி வருகிறோம் இந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக இப்பகுதியில் குடிநீர் சப்ளை நிறுத்தப்பட்டுள்ளது.

இதனால் குடிநீருக்காக குடங்களை எடுத்துக் கொண்டு அன்றாடம் அலைந்து திரிந்து கொண்டு உள்ளோம். இதுகுறித்து பலமுறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எங்கள் கிராமத்திற்கு அனைவருக்கும் தேவையான அளவிற்கு குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் எங்கள் ஊரில் உள்ள சாலைகள் அனைத்தும் மிகவும் பழுதடைந்து குண்டும்-குழியுமாக காட்சியளிக்கிறது. எனவே பழுதடைந்த சாலையை புதுப்பித்து தர வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர் தெரிவித்து உள்ளார்.

மனுவை பெற்றுக்கொண்ட ஒன்றிய ஆணையாளர் ஹரிகரன் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதை தொடர்ந்து பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com