தடைகளை ஏற்படுத்தும் கோட்சார கால சர்ப்ப தோஷம்

ஜாதகருக்கு சுப பலன்களை உரிய காலத்தில் தராமல், சர்ப்பம் என்னும் ராகு கேதுக்களால் காலம் தாழ்த்தி தரப்படுவதால் கால சர்ப்ப தோஷம் எனப்படுகிறது.
தடைகளை ஏற்படுத்தும் கோட்சார கால சர்ப்ப தோஷம்
Published on

பருவ நிலை மாறுபட்டு மழை பொழிவதற்கு பல்வேறு விதமான காரணிகள் உள்ளன. குறிப்பாக மனிதர்களின் செயல்பாடுகளால் இயற்கையில் ஏற்படும் பாதிப்பு மற்றும் இயற்கையான காரணமான புவியின் சுற்றுப்பாதை மற்றும் அதன் அச்சின் சாய்வு ஆகியவற்றின் மாற்றங்களால் பருவ நிலை மாறலாம். அறிவியல் ரீதியான காரணத்தை உற்று நோக்கினால் நவகிரகங்களின் இயக்கமே உலகத்தையும் உலக மக்களையும் வழிநடத்துகிறது.

தற்போது கோட்சாரத்தில் அனைத்து கிரகங்களும் ராகு கேதுக்களின் பிடியில் அகப்பட்டு கால சர்ப்ப தோஷமாக வேலை செய்கிறது. இதில் 15 நாட்கள் சந்திரன் முழுமையாக ராகு கேதுவின் பிடியிலிருப்பார். அடுத்த 15 நாட்கள் ராகு கேதுக்களை விட்டு வெளியில் பயணிக்கும் காலத்தில் விடுபட்ட கால சர்ப்ப தோஷமான கிரக நிலவரம் உண்டாகும்.

பூமியைச் சுற்றியுள்ள அண்டவெளி 12 ராசிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. பூமி தன்னைத்தானே ஒரு நாளுக்கு ஒருமுறை சுற்றுவதால், அதன் பரப்பில் உள்ள ஒவ்வொரு புள்ளியும் ஒரு நாளில் எல்லா ராசிகளையும் கடந்து செல்கின்றது. அதாவது ராசி மண்டலம் ஒரு நாளில் ஒரு முறை பூமியை முழுவதுமாகச் சுற்றிவருகிறது. இதை ஜோதிட பாணியில் லக்னம் என்று கூறுவார்கள். ஒரு லக்னம் என்பது இரண்டு மணி நேரம். சூரியனின் நகர்வுக்கு ஏற்ப சூரிய ஒளியின் பயணமான லக்ன புள்ளி ராகு கேது அச்சிற்கு வெளியே பயணிக்கும். அதாவது கன்னி ராசி முதல் மகர ராசி வரை ராசி மண்டலம் பூமியை சுற்றி வரும் போது லக்ன புள்ளி ராகு கேதுக்கு அச்சிற்கு வெளியில் சஞ்சரிக்கும் போது பிறக்கும் குழந்தைகளுக்கு லக்ன புள்ளி வெளியில் இருக்கும். அது விடுபட்ட கால சர்ப்பதோஷமாக பலன் தரும்.

கோட்சார கால சர்ப்ப தோஷத்திற்கும் உலக இயக்கத்தையே கட்டுப்படுத்தும் சக்தி உண்டு. இந்த தோஷம் ஒரு விதமான நெருடலை உலகிற்கு தந்து கொண்டு தான் இருக்கிறது.

6.6.2025 வரை கடக ராசியில் நீச்ச நிலையில் இருக்கும் செவ்வாய் பகவான் சிம்ம ராசிக்குள் நுழைந்து தனது எட்டாம் பார்வையால் சனி பகவானை பார்ப்பார். அன்று சிம்ம ராசியில் இருந்து செவ்வாய் அகன்று கன்னி ராசிக்குள் நுழையும் பொழுது உலகம் கால சர்ப்ப தோஷப் பிடியிலிருந்து முழுமையாக விடுபடும். ஆனால் செவ்வாய் கன்னியை கடக்கும் வரை தனது ஏழாம் பார்வையால் மீன ராசியில் உள்ள சனிபகவானை பார்ப்பார். சனி, செவ்வாய் சம்பந்தம் கால சர்ப்ப தோஷ பாதிப்பு போன்ற காரணங்களால் 13.9.2025 வரை இயற்கையினால் கோட்சார கிரகங்களினால் மனிதர்களுக்கும் பூமிக்கும் சில பாதிப்புகள் ஏற்படலாம்.

ஜோதிட சாஸ்த்திரத்தில் பல்வேறு விதமான தோஷங்கள் கூறப்பட்டு இருந்தாலும் சர்ப்ப தோஷம் அனைத்து தரப்பினருக்கும் ஒருவிதமான மன நெருடலை தந்து கொண்டு தான் இருக்கிறது. அதிலும் கால சர்ப்ப தோஷம் என்ற பெயரை கேட்டாலே பீதி கிளம்புகிறது. நவகிரகங்களில் வலிமையானவர்கள் ராகு/கேதுக்கள் என்றால் அது மிகையாகாது. ஆண்டியை அரசனாக்கும் வல்லமை ராகுவுக்கும்; அரசனை ஞானியாக்கும் ஆற்றல் கேதுவுக்கும் உண்டு. ராகு/கேது ஒரு முறை ராசிக் கட்டத்தை வலம் வர 18 ஆண்டுகளாகும். ஜனனம் முதல் இரண்டு முறை ராசிக் கட்டத்தை வலம் வந்த பிறகே தோஷம் நிவர்த்தியாகும். (18 x 2=36) 36 ஆண்டுகள் கழித்து, ஜாதகத்தில் உள்ள யோக பலன்களை தருகிறது. கல்வி, திருமண தடை, வேலையின்மை, நோய் எதிப்பு சக்தி குறைதல், அதிர்ஷ்டமின்மை, குடும்பத்தில் குழப்பம், உறவினர்களுடன் ஒற்றுமையின்மை என சில இடையூறுகளையும், தடை தாமதங்களையும் கால சர்ப்ப தோஷம் ஏற்படுத்தி மன நிமைதியை இழக்கச் செய்யும்.

18 முதல் 36 ஆண்டு வரையிலான காலத்தில்தான் மனிதனுக்கு உயர்கல்வி, உத்தியோகம், திருமணம், புத்திர பாக்கியம் போன்ற அனைத்து முக்கிய நிகழ்வுகளும் நடைபெறும். ஜாதகருக்கு சுப பலன்களை உரிய காலத்தில் தராமல், சர்ப்பம் என்னும் ராகு கேதுக்களால் காலம் தாழ்த்தி தரப்படுவதால் கால சர்ப்ப தோஷம் எனப்படுகிறது. இது தொடர்பாக ஜோதிடரிடம் ஆலோசனை பெற்று,  உரிய வழிபாட்டு முறைகளை மேற்கொண்டு தோஷ நிவர்த்தி பெறலாம்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com