சனிப்பெயர்ச்சி.. 12 ராசிக்காரர்கள் செய்ய வேண்டிய வழிபாடு

ஒரு ராசியில் அதிக காலம் சஞ்சரிக்கக்கூடிய கிரகம் என்பதாலும், கர்ம காரகன் என்பதாலும் சனிப் பெயர்ச்சி முக்கியமாக கருதப்பட்டு உரிய வழிபாடுகளை மேற்கொள்வது வழக்கம்.
சனி பகவான் நாளை மறுநாள் (மார்ச் 29) கும்ப ராசியில் உள்ள பூரட்டாதி நட்சத்திரம் 3-ம் பாதத்தில் இருந்து, மீனத்தில் உள்ள பூரட்டாதி 4-ம் பாதத்திற்கு பெயர்ச்சியாக உள்ளார். திருக்கணிதப் பஞ்சாங்கப்படி இந்த கிரகப்பெயர்ச்சி கணிக்கப்பட்டுள்ளது.
ஜோதிடத்தில் ஒவ்வொரு கிரகத்துக்கும் மிக முக்கிய பங்கு இருக்கிறது என்றாலும், ஒவ்வொரு கிரகமும் ஒரு ராசியில் எவ்வளவு காலம் சஞ்சரிக்கிறது? அவை தரும் தாக்கம் எப்படி இருக்கும்? என்பதைப் பொறுத்து அந்த கிரகத்தின் பெயர்ச்சியை மக்கள் அதிகம் கவனிக்கின்றனர். அந்த வகையில் சனி பகவான் ஒவ்வொரு ராசியிலும் இரண்டரை ஆண்டு காலம் சஞ்சரிப்பார். குரு ஓராண்டு காலம், ராகு-கேது ஒன்றரை ஆண்டு காலம் சஞ்சரிப்பார்கள்.
நவக்கிரகங்களில் ஒரு கிரகம் ஒரு ராசியில் அதிக காலம் சஞ்சரிக்கக்கூடியது சனி கிரகம் என்பதோடு, அவர் கர்ம காரகன், நீதிபதி போன்று செயல்படுவதால் சனிப் பெயர்ச்சி முக்கியமாக கருதப்படுகிறது. ஜோதிடத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் சனிப்பெயர்ச்சியை கவனித்து உரிய வழிபாடுகளை மேற்கொள்வது வழக்கம். சனிப்பெயர்ச்சியால் ஏற்படும் தாக்கத்தை குறைத்து நற்பலன்களை பெறுவதற்கு இந்த வழிபாடுகள் கைகொடுக்கும் என்பது நம்பிக்கை.
அந்த வகையில் தற்போதைய சனிப்பெயர்ச்சி காலத்தில் ஒவ்வொரு ராசியினரும் செய்ய வேண்டிய வழிபாடுகள் என்ன என்பதை பார்ப்போம்:
மேஷம்: அறுபடை முருகன் கோவில்களில் ஏதேனும் ஒரு கோவிலுக்கு அடிக்கடி சென்று தரிசனம் செய்யலாம்.
ரிஷபம்: முடிந்தால் திருப்பதி சென்று பெருமாளை தரிசனம் செய்வது சிறந்த பலனை தரும்.
மிதுனம்: ஸ்ரீரங்கம் சென்று ஸ்ரீசக்கரத்தாழ்வாரை தரிசனம் செய்து வர நன்மைகள் கிடைக்கும்.
கடகம்: முடிந்தால் திங்களூர் சென்று தரிசனம் செய்யலாம். அருகில் இருக்கும் புற்று அம்மன் கோவிலுக்கு வேப்பிலையை அர்ப்பணித்து அர்ச்சனை செய்து வணங்கலாம்.
சிம்மம்: தினமும் அருகில் இருக்கும் சிவன் கோவிலுக்கு சென்று சிவதரிசனம் செய்வது சிறப்பு. தினமும் சூரிய நமஸ்காரம் செய்யலாம்.
கன்னி: தட்சிணாமூர்த்தியை வழிபட்டு வர நற்பலன்கள் கிடைக்கும். முடிந்தால் வியாழக்கிழமை 27 கருப்புக் கொண்டைக் கடலை மாலைகள் இரண்டை குரு பகவானுக்கும், தட்சிணாமூர்த்திக்கும் அணிவித்து வணங்கலாம்.
துலாம்: குல தெய்வத்தை தினமும் வணங்கி வர எல்லா நன்மைகளும் உண்டாகும். எதிர்பார்த்த காரிய வெற்றி கிடைக்கும்.
விருச்சிகம்: துர்க்கை அம்மனை செவ்வாய்க் கிழமைகளில் பூஜை செய்து வழிபட எதிர்ப்புகள் நீங்கும். தைரியம் கூடும். பணவரவு திருப்தி தரும்.
தனுசு: வியாழக்கிழமைகளில் குருவை வழிபடவேண்டும்.
மகரம்: ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாற்றி அர்ச்சனை செய்து வணங்க வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். மனதில் தைரியம் அதிகரிக்கும்.
கும்பம்: விநாயகப் பெருமானை வணங்க எல்லா துன்பங்களும் நீங்கும். உடல் ஆரோக்கியம் உண்டாகும்.
மீனம்: பைரவரை வழிபடவேண்டும். குறிப்பாக, தேய்பிறை அஷ்டமி திதியை 'பைரவாஷ்டமி' என்று கூறுவார்கள். அன்று பைரவரை வழிபட்டு வர சிறப்புகள் உண்டாகும்.






