

புதுச்சேரி
மீனவம் காப்போம் மக்கள் இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளர் செல்வம் புதுவை கடலோர மேலாண்மை ஆணைய உறுப்பினர் செயலரிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
கடற்கரை ஒழுங்குமுறை மண்டல அறிவிப்பாணையின் கீழ் புதுவை கடற்கரை மண்டல மேலாண்மை குழுமம் இணைய வழியில் மக்களின் கருத்துக்காக 6 வரைவு திட்ட வரைபடங்களை ஆங்கிலத்தில் மட்டுமே வெளியிட்டுள்ளது. மேலாண்மை திட்டத்தை உருவாக்குவதற்கான வழிகாட்டுதலின் சுருக்கம் தமிழ் மொழியில் வெளியிடப்படவில்லை. இதனால் மீனவ மக்களாகிய எங்களுக்கு வரைபடங்களை புரிந்துகொள்ள முடியவில்லை. இந்த விவரங்கள் அறிந்துகொள்ள முடியாதபட்சத்தில் வருகிற 15-ந்தேதி நடக்க உள்ள மக்கள் கருத்துகேட்பு கூட்டத்தில் கலந்துகொண்டு எங்களின் கருத்தை தெரிவிக்க இயலாது.
தமிழ்நாட்டிற்கான கடற்கரை மண்டல மேலாண்மை திட்ட வரைபடம் தமிழ்மொழியில் தயாரிக்க சொல்லி ஐகோர்ட்டு ஆணையிட்டுள்ளது. அதேபோல் புதுவையிலும் தமிழ்மொழியில் வெளியிட நடவடிக்கை எடுத்து கருத்துகேட்பு கூட்டத்தை நடத்தவேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.