

ஈரோடு,
பெருந்துறை வாய்ப்பாடி விளாந்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 44). இவர் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் தொழிலாளர்களை வேலைக்கு சேர்த்துவிடும் வேலை செய்து வருகிறார். கடந்த 9-ந் தேதி செந்தில்குமார் விஜயமங்கலம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஆம்னி பஸ் ஒன்று எதிர்பாராதவிதமாக செந்தில்குமார் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் கோவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்தநிலையில் செந்தில் குமாரின் அண்ணன் ரவி (46) ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தார். அந்த மனு வில் அவர் கூறிஇருந்ததாவது:-
எனது தம்பி செந்தில்குமார் விபத்தில் சிக்கி சுயநினைவை இழந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்தை ஏற்படுத்திய பஸ்சின் டிரைவர், பஸ்சுக்கான காப்பீடு, உரிமம் போன்ற ஆவணங்கள் சரியாக இருப்பதாக போலீசாரிடம் கூறினார். அவர் போலீசில் காண்பித்த ஆவணத்தில் 2020-ம் ஆண்டு வரை காப்பீடு உள்ளதாக இருந்தது. அந்த நகலை எடுத்து சோதனை செய்தபோது போலியானது என்று தெரியவந்தது. மேலும், விபத்தை ஏற்படுத்திய பஸ்சுக்கு கடந்த ஜூன் மாதம் 8-ந் தேதியுடன் காப்பீடு காலாவதியாகிவிட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், விபத்து நடந்த மறுநாள் பஸ்சுக்கு காப்பீடு எடுத்து உள்ளனர்.
தமிழக அரசு கடந்த ஜூன் மாதம் 19-ந் தேதி அறிவித்த அரசாணையின்படி, விபத்தில் சிக்கும் மோட்டார் வாகனங்களுக்கு உரிய ஆவணங்கள் இல்லாமல் இருந்தால், விபத்தை ஏற்படுத்திய வாகனத்தை ஏலம் விட்டு, அதில் பெறப்படும் தொகையை கோர்ட்டில் சமர்ப்பித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே போலி ஆவணங்கள் மூலம் இயக்கப்பட்ட பஸ்சை பறிமுதல் செய்து ஏலம் விட வேண்டும். அந்த பணத்தை எனது தம்பியின் மருத்துவ செலவுக்கு இழப்பீடாக வழங்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறிஇருந்தார்.