

தங்கம் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்து நகைபிரியர்களை அதிர்ச்சி அடைய வைத்து வருகிறது. கடந்த மாதம் அதிகபட்சமாக பவுன் ரூ.1.34 லட்சமாக விற்பனையானது. அதன் பிறகு விலை குறைவதும் ஏறுவதுமாக உள்ளது. எனினும், தற்போது இறங்கு முகம் நோக்கியே தங்கம் விலை உள்ளது. நடப்பு மாத துவக்கத்தில் இருந்து 15 சதவீதம் விலை வீழ்ச்சியை சந்தித்திருக்கிறது. ஆனாலும் தங்கம் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வரும் சூழலில், அதன் விலை வரும் காலத்தில் எப்படி இருக்கும் என்பது கணிக்க முடியவில்லை. இந்த நிலையில் தங்கம் விலை தொடர்பான புதிய கணிப்புகள் வெளியாகியுள்ளன. அதுபற்றிய விவரம் வருமாறு:
ரஷ்யா மற்றும் அமெரிக்கா இடையே மறைமுக பேச்சுவார்த்தை நடைபெறுவதாகவும், இதனால் 2027 ஆம் ஆண்டுக்குள் தங்கம் விலை பவுனுக்கு ரூ.80 ஆயிரம் ஆக சரிய வாய்ப்புள்ளதாகவும் கணிப்புகள் கூறுகின்றன. புளும்பெர்க் வெளியிட்ட கணிப்பின் படி, உக்ரைனுடனான போர் முடிவுக்கு வரும் பட்சத்தில், அமெரிக்காவுடன் உறவை மேம்படுத்த ரஷ்யா 7 அம்சங்கள் கொண்ட ஒரு திட்டத்தை தயாரித்து வருவதாக சொல்லப்படுகிறது. பொருளாதார தடைகளால் டாலரை புறக்கணித்து வந்த ரஷ்யா, மீண்டும் சர்வதேச மற்றும் எரிவாயு வர்த்தகத்திற்கு அமெரிக்க டாலரை பயன்படுத்த முன்வந்துள்ளதாக சொல்லப்படுகிறது. உக்ரைன் மீது போர் தொடுத்ததால் ரஷ்யா மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்தது. இதனால், இந்தியா மற்றும் சீனாவுடன் ரஷ்யா தனது சொந்த நாணயமான ரூபிளை வைத்து வர்த்தகம் செய்தது. இந்த சூழலில், மீண்டும் டாலர் மூலம் வர்த்தகம் செய்தால் டாலர் மீண்டும் வலுப்பெறும். டாலர் வலுப்பெற்றால் அதற்கு மாற்றாக கருதப்படும் தங்கத்தின் மீதான முதலீடு குறையும். ரஷ்யா தன்னிடம் உள்ள பெரும்பகுதி தங்க இருப்பை விற்று அதை மீண்டும் டாலராக மாற்ற திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் தங்கத்தின் விலை மளமளவென சரிய வாய்ப்புள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.