தங்க கடன் சந்தையில் ஆதிக்கம் செலுத்தும் தென் மாநிலங்கள்.. எந்த இடத்தில் தமிழ்நாடு..?

தமிழ்நாட்டில் மட்டும் ரூ.5 லட்சத்து 97 ஆயிரம் கோடி அளவுக்கு தங்ககடன் சந்தை மதிப்பு இருந்திருக்கிறது.
தங்க கடன் சந்தையில் ஆதிக்கம் செலுத்தும் தென் மாநிலங்கள்.. எந்த இடத்தில் தமிழ்நாடு..?
Published on

சென்னை,

இந்தியாவின் முன்னணி கடன் தகவல் நிறுவனமான சி.ஆர்.ஐ.எப். ஹைமார்க் வெளியிட்ட சமீபத்திய தகவலில், இந்தியாவின் தங்க கடன் சந்தையில் தென் மாநிலங்கள் ஆதிக்கம் செலுத்துவது சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது.

அதாவது கடந்த மார்ச் மாதம் நிலவரப்படி, இந்தியாவின் ஒட்டுமொத்த தங்ககடன் சந்தை மதிப்பான ரூ.18 லட்சத்து 63 ஆயிரம் கோடியில், தென் இந்தியாவில் மட்டும் ரூ.13 லட்சத்து 95 ஆயிரம் கோடிக்கு கடன் சந்தை மதிப்பு இருந்துள்ளது.

இதில் தமிழ்நாடுதான் முதலிடத்தில் உள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் ரூ.5 லட்சத்து 97 ஆயிரம் கோடி அளவுக்கு தங்ககடன் சந்தை மதிப்பு இருந்திருக்கிறது. அதாவது இந்தியாவின் ஒட்டுமொத்த தங்ககடனில் தமிழ்நாடு மட்டும் 32 சதவீத பங்கை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதற்கடுத்தபடியாக தென் இந்தியாவில் ஆந்திராவில் ரூ.3.09 லட்சம் கோடி, கர்நாடகாவில் ரூ.1.82 லட்சம் கோடி, தெலுங்கானாவில் ரூ.1.61 லட்சம் கோடி, கேரளாவில் ரூ.1.46 லட்சம் கோடி அளவுக்கு தங்க கடன் சந்தை இருந்துள்ளது. இந்த புள்ளி விவரங்களில் பிற மாநிலங்களின் பட்டியல் இருந்தாலும் அவற்றின் சந்தை மதிப்பு குறைவாகவே உள்ளது.

வட இந்தியாவில் தங்கத்தை அடகு வைப்பது என்பது வறுமையின் அல்லது குடும்ப கவுரவக்குறைவின் அடையாளமாகப் பார்க்கப்படும் போக்கு இன்னமும் உண்டு. ஆனால், தென்இந்தியாவில் தங்கம் என்பது ஒரு உடனடி மூலதனமாக பார்க்கப்படுகிறது. வணிகத் தேவைக்கோ அல்லது விவசாய முதலீட்டுக்கோ தங்கத்தை அடகு வைப்பது இங்கு ஒரு புத்திசாலித்தனமான நிதி மேலாண்மையாகவே கருதப்படுகிறது. அதனால்தான் தங்க கடன் சந்தையில் தென் மாநிலங்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன.

பணவீக்கம் அதிகரிக்கும் போதோ, வேலைவாய்ப்புச் சிக்கல்கள் வரும் போதோ அல்லது சிறு வணிகங்களுக்கு உடனடி மூலதனம் தேவைப்படும் போதோ இந்த கடன் சந்தை பெரும் எழுச்சி பெறுகிறது. அதன்படி தற்போதைய சூழலில், தங்ககடன் சந்தை எழுச்சி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com