

சென்னை,
சென்னை,அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில், நடிகை ராதிகா சரத்குமார் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த 'தாய் கிழவி' திரைப்படம் கடந்த பிப்ரவரி 27-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
இந்தப் படத்தில் சிங்கம்புலி, அருள்தாஸ், பாலசரவணன், முனிஷ்காந்த், இளவரசு, ஜார்ஜ் மரியன், முத்துக்குமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்திருந்த இப்படத்தை சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் மற்றும் பேஷன் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்திருந்தன.
75 வயது மூதாட்டியின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவான இந்த திரைப்படம், விமர்சன ரீதியாக மட்டுமல்லாமல், வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றது. பெண் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்ட கதையால் ரசிகர்களின் பாராட்டைப் பெற்ற இப்படம், திரையரங்குகளில் 100 நாட்கள் வெற்றிகரமாக ஓடியதுடன், பின்னர் ஓடிடி தளத்திலும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்த நிலையில், 'தாய் கிழவி' திரைப்படத்தின் 100-வது நாள் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படத்தில் நடித்த நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் படக்குழுவினருக்கு நினைவுப் பரிசாக கேடயங்கள் வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டனர்.
விழாவின் முக்கிய நிகழ்வாக, படத்தின் வெற்றிக்கு பாராட்டாக இயக்குநர் சிவகுமார் முருகேசனுக்கு, தயாரிப்பாளர்களான சிவகார்த்திகேயன் மற்றும் சுதன் சுந்தரம் இணைந்து சொகுசு கார் ஒன்றை பரிசாக வழங்கினர்.
இந்த நிகழ்வில் ராதிகா சரத்குமார், சிவகார்த்திகேயன், சிவகுமார் முருகேசன், ரேச்சல் உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டு, 'தாய் கிழவி' திரைப்படத்தின் 100 நாள் வெற்றியை உற்சாகமாக கொண்டாடினர்.