"ஆண்பாவம் பொல்லாதது" படத்தின் வெளியீட்டு உரிமையை பெற்ற பிரபல நிறுவனம்

கலையரசன் தங்கவேல் இயக்கத்தில் ரியோ ராஜ் நடித்துள்ள ‘ஆண்பாவம் பொல்லாதது’ படம் அக்டோபர் 31ம் தேதி வெளியாகிறது.
சென்னை,
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி வந்த ரியோ ராஜ், கடந்த 2019-ல் வெளியான 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து, 'பிளான் பண்ணி பண்ணனும், ஜோ, ஸ்வீட் ஹார்ட்' உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார்.
ரியோ ராஜ் மற்றும் மாளவிகா மனோஜ் இணைந்து நடித்த ''ஜோ'' திரைப்படம் வெளியாகி மக்களிடையே விமர்சனம் ரீதியாகவும் வசூல் ரீதியாகும் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து ''ஜோ'' பட ஜோடி மீண்டும் ஒன்றாக இணைந்து நடித்துள்ள படம் ‘ஆண்பாவம் பொல்லாதது’. இப்படத்தை கலையரசன் தங்கவேல் இயக்கியுள்ளார். டிரம்ஸ்டிக்ஸ் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படம் சமுதாயத்தில் ஆண்கள் படும் கஷ்டத்தை பற்றி பேசும் படமாக உருவாகியுள்ளது.
‘ஆண்பாவம் பொல்லாதது’ படம் அக்டோபர் 31ம் தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில், இப்படத்தின் தமிழ்நாட்டு திரையரங்க வெளீயிட்டு உரிமையை பிரபல நிறுவனமான ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.






