

நடிகர் அஜித் குமாரின் மகன் ஆத்விக் கால்பந்து சாம்பியன் பட்டம் வென்ற புகைப்படங்களை ஷாலினி அஜித்குமார் பகிர்ந்துள்ளார். வெற்றி தோல்வியை தாண்டி விளையாடுவதில் இருக்கும் மகிழ்ச்சிதான் முக்கியம் என்ற கருத்தை ஷாலினி பகிர்ந்து இருக்கிறார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழும் அஜித்குமார், கார் பந்தய வீரராகவும் தனது திறமையை நிரூபித்து வருகிறார். 'குட் பேட் அக்லி' படத்திற்கு பிறகு கார் ரேசிங்கில் அதிக கவனம் செலுத்தி வரும் அவர், ‘அஜித்குமார் ரேசிங்’ என்ற தனது சொந்த பந்தய அணியையும் தொடங்கி ரேசிங் தொடர்களிலும் கலந்து கொண்டு வருகிறார்.
நடிகர் அஜித் குமாரின் சர்வதேச மோட்டார் ஸ்போர்ட்ஸ் பயணத்தையும், ரேசிங் களத்தில் அவர் சந்தித்த சவால்களையும் பதிவு செய்துள்ள ‘கிளாடியேட்டர்ஸ் - இன் பர்சூட் ஆப் சேலஞ்சஸ்’ ஆவணத் திரைப்படம் அக்டோபர் மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுடன் அஜித் மீண்டும் இணைந்துள்ளார். அஜித்தின் 64-வது திரைப்படமாக உருவாகி வரும் ‘டேர்டெவில்’ படத்தை அஜித்தின் மனைவி ஷாலினி தயாரிக்கிறார்.
நடிகர் அஜித்தின் மகன் ஆத்விக் சிறுவயது முதலே விளையாட்டில் ஆர்வம் கொண்டவராக இருந்து வருகிறார். கடந்த 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜூனியர் கால்பந்து போட்டியில் ஆத்திவ் தனது அணியுடன் தங்க பதக்கம் வென்ற புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆனது.
இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற மஹோகனி யூத் லீக் போட்டியில், மீண்டும் கால்பந்து போட்டியில் ஆத்விக் அணி சாம்பியன் கோப்பையை வென்றுள்ளது.
ஆத்விக்கின் அணி வெற்றியை ஷாலினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் “முடிவை விட விளையாடுவதில் உள்ள மகிழ்ச்சிக்கே முக்கியத்துவம் கொடுத்து, அவர்கள் விளையாடுவதையும், ரசித்து, மகிழ்ச்சியாக இருப்பதையும் பார்ப்பது மிகவும் அருமையாக இருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.