

சென்னை,
நடிகை மீனா குழந்தை நட்சத்திரமாக திரைத்துறையில் அறிமுகமானார். தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்த அவர், பின்னர் முன்னணி நாயகியாக உயர்ந்தார். 13 வயதிலேயே ஹீரோயினாக மாறிய மீனா, இதுவரை ஏராளமான வெற்றி படங்களில் நடித்துள்ளார். இன்றும் பல்வேறு கதாபாத்திரங்களில் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
இதில், ஒரு விசேஷம் என்னவென்றால், அவர் ஒரே நடிகருடன் மகள், மனைவி, தாய் என மூன்று விதமான கதாபாத்திரங்களிலும் நடித்திருக்கிறார். அந்த நடிகர் யார் தெரியுமா?, அவர் வேறு யாருமில்லை, மலையாள நடிகர் மம்முட்டிதான்.
1984-ம் ஆண்டு வெளியான ’ஒரு கொச்சு கத யாரும் பரயாத கதை’ திரைப்படத்தில், மீனா குழந்தை நட்சத்திரமாக நடித்தார். அதில் மம்முட்டி சுரேந்திரன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில், மீனா அவரது காதலியின் மகளாக தோன்றி, மம்முட்டி அவரை தன் மகளாகவே நேசிக்கும் வகையில் கதை அமைந்திருந்தது.
பின்னர் ’ரக்ச ராஜாவு’ படத்தில் மீனா, மம்முட்டிக்கு ஜோடியாக நடித்தார். அடுத்து 2014ஆம் ஆண்டு வெளியான ’பால்யகாலசகி’ படத்தில் மம்முட்டி இரட்டை வேடத்தில் (தந்தை மற்றும் மகன்) நடித்தார். தந்தை கதாபாத்திரத்திற்கு மீனா மனைவியாகவும், மகன் கதாபாத்திரத்திற்கு தாயாகவும் நடித்தார். இவ்வாறு ஒரே நடிகருடன் மகள், மனைவி, தாய் என மூன்று கதாபாத்திரங்களில் நடித்து மீனா சாதனை படைத்துள்ளார்.