

திருவண்ணாமலை,
மலையாளம் மற்றும் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சாய் பல்லவி, திருவண்ணாமலையில் உள்ள அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
'பிரேமம்' திரைப்படத்தில் மலர் டீச்சர் கதாபாத்திரத்தின் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்த சாய் பல்லவி, தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் தனக்கென தனி இடத்தைப் பிடித்துள்ளார். தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த அவர், கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார். மேலும், கவர்ச்சி காட்சிகளைத் தவிர்த்து, இயல்பான நடிப்பாலும், மேக்கப் இல்லாத தோற்றத்தாலும் ரசிகர்களின் பாராட்டைப் பெற்று வருகிறார்.
தற்போது இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகி வரும் 'ராமாயணா: பகுதி 1' திரைப்படத்தில் சீதையாக சாய் பல்லவி நடித்து வருகிறார். 2026 தீபாவளியை முன்னிட்டு வெளியாகவுள்ள இந்தப் படத்தில் ரன்பீர் கபூர் ராமராகவும், யாஷ் ராவணனாகவும் நடித்துள்ளனர். மேலும் சன்னி தியோல், பிரியாமணி, ராகுல் ப்ரீத் சிங், ரவி துபே உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த நிலையில், நடிகை சாய் பல்லவி திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் வழங்கி மரியாதை செய்யப்பட்டது. தரிசனத்தை முடித்துவிட்டு வெளியே வந்த சாய் பல்லவியை பார்த்த ரசிகர்கள் அவரை சூழ்ந்து கொண்டு புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.