

திருவண்ணாமலை,
இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘ஓம்’ படத்தின் படப்பிடிப்பு பணிகள் திருவண்ணாமலையில் நடைபெற்று வரும் நிலையில், அவரை காண ஏராளமான ரசிகர்கள் குவிந்ததால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ், வித்தியாசமான கதைக்களங்களைத் தேர்வு செய்து தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இவர் தற்போது ‘அமரன்’ திரைப்படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் ‘ஓம்’ படத்தில் நடித்து வருகிறார். வுண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் ஆடேக்ஸ் ஸ்டுடியோஸ் இணைந்து இந்த படத்தை தயாரித்து வருகின்றன.
ஆக்ஷன் கதைக்களத்தில் உருவாகி வரும் இத்திரைப்படத்தில், ஸ்ரீலீலா மற்றும் சாய் பல்லவி கதாநாயகிகளாக நடிக்கின்றன. மேலும், மலையாள திரையுலகின் முன்னணி நடிகர் மம்முட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார், பாலிவுட் நடிகர் நஸ்ருதீன் ஷாவும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு நஸ்ருதீன் ஷா தமிழில் நடிப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
சமீபத்தில் வெளியான ‘ஓம்’ படத்தின் டைட்டில் போஸ்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும், இப்படம் வருகிற அக்டோபர் 16-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. படத்தின் பணிகளை விரைவில் முடிக்க படக்குழுவினர் தீவிரமாக படப்பிடிப்பு பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்த நிலையில், ‘ஓம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் திருவண்ணாமலை கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடைபெற்று வருகிறது. அங்கு நடிகர் தனுஷை நேரில் காணவும், அவரது படப்பிடிப்புச் காட்சிகளைப் பார்க்கவும் ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். தனுஷை சந்தித்த அவரது ரசிகர்கள் அவருடன் புகைப்படம் எடுக்க முயன்றனர். அதனால் அந்த சற்று பரபரப்பான சூழல் ஏற்பட்டது. இதுகுறித்து வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.