

தமிழ், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா, தற்போது தயாரித்து நடித்துள்ள ‘மா இண்டி பங்காரம்’ திரைப்படத்தின் விளம்பர பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். குடும்ப உணர்வுகள் மற்றும் அதிரடி அம்சங்கள் கலந்த இந்தப் படம் வருகிற 19-ஆம் தேதி வெளியாக உள்ளது.
இந்த நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த சமந்தா, சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார்.
அப்போது ரசிகர் ஒருவர், “உங்களை வெறுப்பவர்களை ஒரே வார்த்தையில் எப்படி விவரிப்பீர்கள்?” என்று கேட்டார். அதற்கு நகைச்சுவையாக பதிலளித்த சமந்தா, “ஹேட்டர்ஸா? யாருடைய ஹேட்டர்ஸ்? எனக்கெல்லாம் ஹேட்டர்ஸ் இருக்காங்களா என்ன?” என்று கூறி ரசிகர்களை சிரிக்க வைத்தார்.
மேலும் ‘மா இண்டி பங்காரம்’ படம் குறித்து பேசிய சமந்தா, “இயக்குநர் நந்தினி ரெட்டி முதலில் சாய் பல்லவியை மனதில் வைத்துதான் இந்தப் படத்தின் கதையை உருவாக்கினார். ஆனால் அவர் தொடர்ந்து பல படங்களில் பிஸியாக இருந்ததால் இந்தப் படத்தில் நடிக்க முடியவில்லை. அதன் பிறகுதான் அந்தக் கதையில் சில மாற்றங்கள் செய்து என்னிடம் கூறினார். கதை மிகவும் பிடித்திருந்ததால், படத்தை தயாரித்து நடிக்க நான் சம்மதித்தேன்,” என்று தெரிவித்துள்ளார்.
சமந்தாவின் இந்தப் பேச்சு, ‘மா இண்டி பங்காரம்’ திரைப்படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.