

டெல்லியில் போராடிய மாணவர்கள் மீது கிரிமினல் வழக்குகள் எதையும் பதிவு செய்ய வேண்டாம் என்றும், அவர்களின் எதிர்காலத்தை சீரழித்து விடாதீர்கள் என்று நடிகர் பிரகாஷ் ராஜ் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.
டெல்லி ஜந்தர் மந்தரில் நீட் வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடுகளைக் கண்டித்து கரப்பான் பூச்சி ஜனதா கட்சி சார்பில் மாணவர்கள், இளைஞர்கள் பலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரது தாயார் குறித்து வார்த்தைகளைப் பயன்படுத்திய மாணவர்களை மன்னிப்பதாகப் பிரதமர் நரேந்திர மோடி இன்ஸ்டாகிராமில் செல்பி வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
டெல்லி ஜந்தர் மந்தர் போராட்டத்தில் தமக்கு எதிராகவும், தமது மறைந்த தாயார் குறித்தும் அவதூறான வார்த்தைகளைப் பயன்படுத்திய மாணவர்களை மன்னிப்பதாகப் பிரதமர் நரேந்திர மோடி இன்ஸ்டாகிராமில் செல்பி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், "அவதூறுகளால் எதுவும் மாறப்போவதில்லை. மாணவர்களைத் தண்டிப்பதோ, நீதிமன்ற வழக்குகளில் இழுப்பதோ அல்லது சமூகத்தில் அவர்களைத் துன்புறுத்துவதோ எந்தத் தீர்வையும் தராது. நான் அவர்களை மன்னிக்க விரும்புகிறேன்... வழிதவறிய மாணவர்களுக்கு நல்வழி காட்டுவோம்” என்று பிரதமர் கூறியிருந்தார்.
டெல்லி ஜந்தர் மந்தரில் தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் போது, பிரதமருக்கு எதிராக அவதூறாகப் பேசியதாக நோய்டாவைச் சேர்ந்த 15 வயது சிறுமி மீது ‘ஜீரோ எப்.ஐ.ஆர்’ பதிவு செய்யப்பட்டது. வழக்கு தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, அச்சிறுமி ஒரு வீடியோ வெளியிட்டு, "இது எனது முதல் மற்றும் கடைசித் தவறு. சூழ்நிலை காரணமாக உணர்ச்சிவசப்பட்டுப் பேசிவிட்டேன், என்னை மன்னித்துவிடுங்கள் என மன்னிப்பு கோரியிருந்தார்.
டெல்லி போராட்டங்களில் பங்கேற்ற மாணவர்கள் மற்றும் குற்றப்பின்னணி இல்லாத இளைஞர்கள் மீதான வழக்குகளை விடுவிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், மாநில அரசு சில வழக்குகளை திரும்பப் பெற்று வருகிறது.
இந்நிலையில், டெல்லியில் போராடிய மாணவர்கள் மீது கிரிமினல் வழக்குகள் எதையும் பதிவு செய்ய வேண்டாம் என்றும், அவர்களின் எதிர்காலத்தை சீரழித்து விடாதீர்கள் என்று நடிகர் பிரகாஷ் ராஜ் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார். இது குறித்து வீடியோவில் “இளைஞர்கள் தவறு செய்யும்போது பெரியவர்கள் அவர்களைக் கண்டித்துத் திருத்த வேண்டுமே தவிர, காவல் துறை மூலமாக வழக்குப்பதிவு செய்து அவர்களைத் துன்புறுத்தக் கூடாது. நாட்டின் சீர்குலைந்த கட்டமைப்பு மற்றும் போலீஸ் அத்துமீறல்களால் விரக்தியடையும் இளைஞர்களின் ஆதங்கத்திற்கு அரசும் பொறுப்பேற்க வேண்டும். மாணவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுத்தால், அது அவர்களின் எதிர்காலத்தையும், பெற்றோர் மற்றும் குடும்பத்தினரையும் கடுமையாகப் பாதிக்கும். அவர்கள் நம் நாட்டின் குழந்தைகள்; அன்போடு அவர்களை அணுகுங்கள்; அவர்களின் வாழ்க்கையையும், எதிர்காலத்தையும் சீரழித்துவிடாதீர்கள்” என்று பிரதமர் மோடியின் வீடியோவை குறிப்பிட்டு நடிகர் பிரகாஷ் ராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.