

சென்னை,
‘டாக்ஸிக்’ படத்தின் ஓடிடி உரிமம் ஆரம்பத்தில் ரூ.150–ரூ.200 கோடி வரை எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது சுமார் ரூ.30 கோடி மட்டுமே ஆபர் செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
கன்னட திரைத்துறையின் முன்னணி நடிகர் யாஷ். இவர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டாக்சிக். கீது மோகந்தாஸ் இயக்கத்தில் கடந்த 26ம் தேதி உலகம் முழுவதும் இப்படம் ரிலீஸ் ஆனது. கேவிஎன் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் கேங்ஸ்டர் டிராமா கதைக்களத்தில் உருவாகியுள்ளது. இப்படத்தில் நயன்தாரா, கியாரா அத்வானி, ருக்மணி வசந்த், ஹுமா குரேஷி, தாரா சுத்ரியா உள்பட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்நிலையில், ரூ.500 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றுள்ளது. தொடக்கத்தில் நல்ல வரவேற்பு கிடைத்தாலும், தொடர்ந்து வசூலில் சரிவு ஏற்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. கிட்டத்தட்ட ரூ.300 கோடி வரை மட்டுமே வசூல் செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இத்திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வசூல் செய்யாத நிலையில், அதன் ஓடிடி உரிமைக்கான மதிப்பு கடுமையாக சரிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆரம்பத்தில் ரூ.150–ரூ.200 கோடி வரை எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது சுமார் ரூ.30 கோடி மட்டுமே ஆபர் செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே, ஓடிடி வெளியீட்டுக்காக படத்தை சில மாற்றங்களுடன் புதிய வடிவில் எடிட் செய்வது குறித்தும் படக்குழு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் படத்துக்கு ஓடிடி தளங்களில் அதிக வரவேற்பை ஏற்படுத்தி, சிறந்த டிஜிட்டல் ஒப்பந்தத்தை பெற முடியுமா என்ற முயற்சியில் படக்குழு இருப்பதாக கூறப்படுகிறது.