

மும்பை,
இந்திய சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அக்சய் குமார், தனது பள்ளி நாட்கள் குறித்து பகிர்ந்துள்ள கருத்துகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. தான் பள்ளியில் ஒரு பேக்பெஞ்சர் என்றும், பரிட்சையில் பாஸ் ஆகவே சிரமப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பாலிவுட்டில் பல சூப்பர் ஹிட் மற்றும் பிளாக்பஸ்டர் படங்களில் நடித்துள்ள அக்சய் குமார், சமீப ஆண்டுகளில் தொடர்ந்து பல படங்களில் நடித்தாலும், அதில் சில படங்களே வெற்றி பெற்றுள்ளன. கொரோனாவுக்கு பிறகு வெளியான அவரது 16 படங்களில் 2-3 படங்கள் மட்டுமே வெற்றியடைந்துள்ளன. இருந்தாலும், ஆண்டுக்கு 4-5 படங்கள் வரை தொடர்ந்து நடித்து வருகிறார்.
இந்நிலையில், ஒடு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், தனது பள்ளி வாழ்க்கையை நினைவுகூர்ந்தார். “நான் பள்ளியில் டாப்பர் அல்ல. பேக்பெஞ்சர்தான். பரிட்சையில் பாஸ் ஆகவே சிரமப்பட்டேன். பலமுறை தேர்வில் தோல்வியையும் சந்தித்தேன். ஆனால், எனக்குள் இருந்த மற்ற திறமைகளை கண்டறிந்து அதில் முன்னேறினேன்” என்றார்.
மேலும், “வாழ்க்கையில் வெற்றி பெற மதிப்பெண்கள் மட்டும் முக்கியமல்ல” என்றும் அவர் கூறினார். தற்போது, அவர் ’பூத் பங்களா’ திரைப்படத்தில் நடித்துவருகிறார். இந்த படம் இன்று திரைக்கு வந்துள்ளது.
அக்சய் குமார் தமிழில் ரஜினி நடித்த எந்திரன் 2 படத்தில் நடித்திருந்தார்.