

சென்னை,
"எப்போதும் போல ரசிகர்களை மகிழ்விப்பதே என் வேலை. நான் தங்கமான பொண்ணு என்பது ரசிகர்களுக்கு தெரியும். அவர்களுக்காக தொடர்ந்து நல்ல படங்கள் நடித்து பரவசப்படுத்துவேன்", என்று நடிகை அனுபமா தெரிவித்துள்ளார்.
மலையாளத்தில் பிரேமம் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆனவர் அனுபமா பரமேஸ்வரன். தமிழ் திரைப்பட ரசிகர்கள் மத்தியிலும் முதல் படத்திலேயே நன்கு பரிட்சயமான அனுபமா, தமிழில் கொடி, டிராகன் மற்றும் பைசன் காளமாடன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டும் இன்றி தெலுங்கு, மலையாள படங்களில் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக உள்ளார்.
சமீபகாலமாக அனுபமா பரமேஸ்வரன் வெளியிடும் பதிவுகள் சோகத்தையும், தத்துவத்தையும் பிரதிபலித்து வந்தது. அவர் காதலில் தோல்வி அடைந்துவிட்டதாகவும் பேசப்பட்டது. அதை மெய்ப்பிக்கும் விதமாக அவரும் அமைதி முகமாக காணப்பட்டார். தற்போது அனுபமா பரமேஸ்வரன் மீண்டும் உற்சாகம் கொண்டுள்ளார். முன்புபோலவே மகிழ்ச்சி பொங்கும் தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அவர் கூறும்போது, "மகிழ்ச்சியும். சோகமும் வாழ்க்கையில் சகஜம். அதற் காக நிகழ்காலத்தை தொலைக்கக்கூடாது. எப்போதும் போல ரசிகர்களை மகிழ்விப்பதே என் வேலை. நான் தங்கமான பொண்ணு என்பது ரசிகர்களுக்கு தெரியும். அவர்களுக்காக தொடர்ந்து நல்ல படங்கள் நடித்து பரவசப்படுத்துவேன்", என்றார்.
இதற்கிடையில் நடிகை அனுபமா தெலுங்கில் 'கிரேஸி கல்யாணம்' என்ற தெலுங்கு படத்தில் நடித்துள்ளார். இந்தபடம் வருகிற டிசம்பர் மாதம் வெளியாக உள்ளது. மேலும், அதனை தொடர்ந்து, இயக்குநர் ஷான் இயக்கவுள்ள உளவியல் திரில்லர் படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.