தயாரிப்பாளர் ஆர்.பி. சவுத்ரி மறைவுக்கு திரைப்பிரபலங்கள் இரங்கல்!

இவரது உடல் இன்று சென்னை தியாகராயநகர் இல்லத்துக்கு கொண்டு வரப்பட்டு, அங்கு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டு பின்னர் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.
தயாரிப்பாளர் ஆர்.பி. சவுத்ரி மறைவுக்கு திரைப்பிரபலங்கள் இரங்கல்!
Published on

சென்னை,

தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பாளராக திகழ்ந்த ஆர்.பி. சவுத்ரி ராஜஸ்தானில் நிகழ்ந்த கார் விபத்தில் உயிரிழந்தார். அவருக்கு வயது 72.

தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் ஏராளமான வெற்றி படங்களை தயாரித்து வந்த ஆர்.பி. சவுத்ரி, சொந்த ஊரான உதய்பூர் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஜோத்பூர் அருகே சென்றுகொண்டிருக்கும்போது, எதிரே வந்த லாரி மோதியதால் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் இருந்த சிறிய பாலத்தின் பக்கவாட்டு சுவரில் பலமாக மோதியது.

இந்த விபத்தில் காரின் முன்பகுதி கடுமையாக சேதமடைந்ததுடன், ஆர்.பி. சவுத்ரி படுகாயமடைந்தார். உடனடியாக அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை அளிக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இவரது உடல் இன்று (புதன்கிழமை) சென்னை தியாகராயநகர் இல்லத்துக்கு கொண்டு வரப்பட்டு, அங்கு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டு பின்னர் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. ஆர்.பி. சவுத்ரியின் திடீர் மறைவு திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், நடிகர் சரத்குமார் தயாரிப்பாளர் ஆர்.பி. சவுத்ரிக்கு இரங்கல் தெரிவித்து வெளியிட்டுள்ள பதிவில், "புகழ்பெற்ற தயாரிப்பாளரும், எனது நண்பரும், வழிகாட்டியும், தத்துவஞானியும், எனது நட்சத்திர அந்தஸ்திற்குக் காரணமானவருமான அவர், மிகவும் துரதிர்ஷ்டவசமான ஒரு கார் விபத்தில் காலமானார் என்ற செய்தியைக் கேட்டு நான் அதிர்ச்சியும் ஆழ்ந்த துயரமும் அடைந்தேன். அவரது குடும்பத்தினருக்கு எங்களது இரங்கல்கள். இந்தியத் திரைப்படத்துறைக்கு குறிப்பாகப் பல தசாப்தங்களாக அவர் உருவாக்கிய திரைப்படங்களின் வாயிலாக அவர் ஆற்றிய அளப்பரிய பங்களிப்பு என்றென்றும் நினைவுகூரப்படும்." என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, நடிகர் சந்தானம் வெளியிட்டுள்ள பதிவில், "தென்னிந்தியத் திரையுலகின் தொலைநோக்குச் சிந்தனையாளரான தயாரிப்பாளரும், எனக்கும் திரையுலகில் உள்ள இன்னும் பலருக்கும் வழிகாட்டியாகவும் துணையாகவும் திகழ்ந்தவருமானவரின் மறைவால், நான் ஆழ்ந்த துயரம் அடைந்தேன். அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள். ஆர்.பி.சவுத்ரி அவர்களின் ஆத்மா சாந்தியடையட்டும்" என்று தெரிவித்துள்ளார்.

இயக்குனரும், நடிகருமான கே.எஸ் ரவிக்குமார் வெளியிட்டுள்ள பதிவில், "ஆர்.பி.சவுத்ரி ஐயாவின் மறைவுச் செய்தியைக் கேட்டு அதிர்ச்சியும் மிகுந்த மனவேதனையும் அடைந்தேன். 'சூப்பர் குட் பிலிம்ஸ்' எனக்கு ஒரு ஆலயமாகத் திகழ்ந்தது; எனது கலைப் பயணத்தை வடிவமைத்த ஒரு கடவுள் போன்ற ஆளுமையாக அவர் விளங்கினார். அவருக்கு நான் என்றும் நன்றியுள்ளவனாக இருப்பேன். இது ஒரு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு. உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும் ஐயா. அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களையும் பிரார்த்தனைகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்." என்று தெரிவித்துள்ளார்.

நடிகர் விஷால் வெளியிட்டுள்ள பதிவில், "மிகவும் அதிக எண்ணிக்கையிலான படங்களைத் தயாரித்த தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி ஐயா அவர்களின் மறைவுச் செய்தியைக் கேட்டு அதிர்ச்சியடைந்தேன். படப்பிடிப்புப் பணிகளுக்கு மத்தியில், இந்தச் செய்தியை என்னால் சற்றும் ஜீரணிக்க இயலவில்லை. வார்த்தைகள் ஏதுமின்றித் திகைத்து நிற்கிறேன். வாழ்க்கை மிகவும் நிலையற்றது. இந்தியாவின் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றின் உரிமையாளர் அவர். அவரது ஆன்மா சாந்தியடையப் பிரார்த்திக்கிறேன். ஜீவா, ஜிதன் ரமேஷ், சுரேஷ் மற்றும் அவர்களது குடும்பத்தினர் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்தத் துயர இழப்பிலிருந்து மீண்டு வர, இறைவன் அவர்களுக்குத் துணிவையும் மன உறுதியையும் வழங்கட்டும்." என்று தெரிவித்துள்ளார்.

நகைச்சுவை நடிகர் சதீஷ் வெளியிட்டுள்ள பதிவில், "புகழ்பெற்ற தயாரிப்பாளர் ஆர்.பி. சவுத்ரி ஐயாவின் மறைவுச் செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன். அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களையும் பிரார்த்தனைகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்." என்று தெரிவித்துள்ளார்.

நடிகை குஷ்பு வெளியிட்டுள்ள பதிவில், "நமது மிகவும் புகழ்பெற்ற தயாரிப்பாளர்களில் ஒருவரும், ஒரு உன்னதமான பண்பாளருமான ஆர்.பி.சவுத்ரி சார் இனி நம்முடன் இல்லை என்பதை அறிந்து மிகுந்த வருத்தம் அடைகிறேன். அவரது அகால மரணம் அதிர்ச்சியளிக்கிறது. அவரது தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் பல படங்களில் பணியாற்றியுள்ளேன். அவர் திரையுலகில் மிகவும் மதிக்கப்பட்ட உறுப்பினர்களில் ஒருவராக இருந்தார். எப்போதும் புன்னகை தவழும் முகத்துடனும், உறுதியான கைகுலுக்கலுடனும் இருந்த ஒரு மனிதராக அவரை நினைவில் கொள்வேன். அவரது குடும்பத்தினருக்கும் அன்புக்குரியவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள். அவரது ஆன்மா சாந்தி அடையட்டும். ஓம் சாந்தி" என்று தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com