

நாங்குநேரி,
திசையன்விளை அருகே உள்ள மன்னார்புரத்தைச் சேர்ந்த ஜெயபாலன் ( வயது 45). இவர் திரைப்பட இயக்குனர் தற்போது பந்து படத்தை இயக்கி வந்தார். நேற்று முன்தினம் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு ஓட்டு போடுவதற்காக கடந்த 22- ம் தேதி அதிகாலை புறப்பட்டார். பஸ்ஸில் இடம் கிடைக்கவில்லை. எனவே ஓட்டு போட வேண்டும் என்ற நோக்கத்தில் எப்படியாவது சொந்த ஊருக்கு கிளம்ப வேண்டும் என முடிவு செய்து மனைவி பேச்சியம்மாள் (35) , 7 வயது சிறுவனுடன் சென்னையில் இருந்து மோபேட் ஒன்றில் 22- ம்தேதி அதிகாலை புறப்பட்டார்.
அவரது மனைவியின் சொந்த ஊர் ராதாபுரம் அருகே உள்ள கஸ்தூரி ரெங்கபுரம். எனவே மனைவியை அங்கு சென்று விட்டுவிட்டு அங்கிருந்து நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி மன்னார்புரம் வர முடிவு செய்துள்ளார். செல்லும் வழியில் சில இடங்களில் சற்று ஓய்வு எடுத்துக் கொண்டு 23- ம்தேதி அதிகாலை நாங்குநேரி அடுத்து வாகைகுளம் ரோட்டில் வலது புறம் ஒரமாக நின்று கொண்டு இருந்தனர். அந்த சமயத்தில் எதிரே இருந்து வந்து கார் ஓன்று இவர்கள் மூன்று பேர்கள் மீதும் எதிர்பாராதவிதமாக மோதியது.
அப்போது மூன்று பேர்களும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர். இதில் ஜெயபாலன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மனைவி பேச்சியம்மாள் மற்றும் 7 வயது சிறுவனும் பலத்த காயமடைந்து நாகர்கோவில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக நாங்குநேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.