

சென்னை,
திரைப்படப் பாடல்களுக்கு இணையாக நாட்டுப்புறப் பாடல்களும் தற்போது மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகின்றன. சில நேரங்களில் திரைப்படப் பாடல்களை விட நாட்டுப்புறப் பாடல்கள் அதிக பிரபலமடைந்து கோடிக்கணக்கான பார்வைகளைப் பெறுகின்றன.
இந்த நாட்டுப்புறப் பாடல்களின் மூலம் பலர் பிரபலமடைந்துள்ளனர். பாடகர்கள் மட்டுமல்லாமல், நடனக் கலைஞர்களும் தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளனர். அவர்களில் ஒருவர்தான் நாக துர்கா. தனது நடனத் திறமையால் கவனம் ஈர்த்த இவர், தற்போது மில்லியன் கணக்கான பார்வைகளைப் பெறும் பாடல்களில் நடனமாடி வருகிறார்.
சமீபத்திய ஒரு பேட்டியில், பாடல் தேர்வில் மிகவும் கவனமாக இருப்பதாக நாக துர்கா தெரிவித்தார். ஒரு பாடலில் நடனமாடுவதற்கு முன் அதன் வரிகளையும் அர்த்தத்தையும் முழுமையாகப் புரிந்துகொள்வதாகவும், தனக்கு சங்கடமாக இருக்கும் சொற்கள் இருந்தால் மாற்றுமாறு கேட்பதாகவும் கூறினார். மாற்றம் செய்யாத பட்சத்தில் அந்தப் பாடலை நிராகரிக்கவும் தயாராக இருப்பதாக கூறினார்.
இதுவரை 300-க்கும் மேற்பட்ட நாட்டுப்புறப் பாடல்களுக்கு நடனமாடியிருப்பதாகவும் அது தனது கெரியரில் ஒரு மிகப்பெரிய சாதனை என்றும் கூறினார். ஒரு காலத்தில் 5 மில்லியன் பார்வைகள் கிடைத்தால் பெரிய விஷயமாக இருந்தது என்றும் ஆனால் தற்போது 50 மில்லியன் பார்வைகள் கூட சாதாரணமாகிவிட்டதாகவும் கூறினார்.
நாக துர்கா தற்போது ஒரு தமிழ் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ பட நடிகர் பவிஷ் கதாநாயகனாக நடிக்கிறார்.