“புரோ கோட்” டைட்டிலை பயன்படுத்த ரவிமோகனுக்கு அனுமதி அளித்த ஐகோர்ட்டு


“புரோ கோட்” டைட்டிலை பயன்படுத்த ரவிமோகனுக்கு அனுமதி அளித்த ஐகோர்ட்டு
x
தினத்தந்தி 4 Oct 2025 5:54 PM IST (Updated: 28 Oct 2025 1:39 PM IST)
t-max-icont-min-icon

ரவிமோகன் ஸ்டூடியோஸ் "புரோ கோட்" என்ற டைட்டிலை பயன்படுத்துவதை தடுக்கக்கூடாது என சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

'ஜெயம்' திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான நடிகர் ரவி மோகன், எம் குமரன் மகாலட்சுமி, உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்ரமணியம், பேராண்மை, தனி ஒருவன் போன்ற பல வெற்றி படங்கள் கொடுத்து தனக்கென ஒரு இடத்தை திரைத்துறையில் பிடித்துள்ளார். தற்போது 'பராசக்தி' என்ற திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் உடன் நடித்துவரும் ரவி மோகன், சமீபத்தில் 'ரவி மோகன் ஸ்டுடியோஸ்' என்ற பெயரில் புதிய திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார்.

தனது தாயரிப்பு நிறுவனத்தின் மூலம் "டிக்கிலோனா" படத்தை இயக்கிய கார்த்திக் யோகி இயக்கத்தில் 'புரோ கோட்' என்ற திரைப்படத்தை தயாரித்து நடிக்கிறார் ரவி மோகன். இப்படத்தில் எஸ்.ஜே சூர்யா, ஷரத்தா ஸ்ரீனாத், மாளவிகா மனோஜ், ஸ்ரீ கௌரி பிரியா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இதற்கிடையில், டெல்லியை சேர்ந்த மதுபான நிறுவனம் ஒன்று புரோ கோட் (BRO CODE) என்ற டைட்டிலை பயன்படுத்தக் கூடாது என்று வழக்கு தொடர்ந்திருந்தது. அதில், ‘புரோ கோட்’ என்பது தங்களது வர்த்தக முத்திரை மற்றும் படத்திற்கு இதுபோன்ற தலைப்பைப் பயன்படுத்துவதன் மூலம் அவர்களது வர்த்தக உரிமைகளுக்கு சேதம் ஏற்படக்கூடும் என்று குறிப்பிட்டிருந்தனர்.

இந்த நிறுவனத்திற்கு எதிராக ரவி மோகன் ஸ்டுடியோஸ் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு மீதான விசாரணை இன்று சென்னை ஐகோர்ட்டிற்கு வந்தது. அப்போது, புரோ கோட் என்ற சினிமா தலைப்பு எந்த விதத்திலும் மதுபானம் உற்பத்தி செய்யும் நிறுவனத்தின் வணிக சின்ன உரிமையை மீறவில்லை என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், ரவிமோகன் ஸ்டூடியோஸ் புரோ கோட் என்ற டைட்டிலை பயன்படுத்துவதை தடுக்கக்கூடாது என டெல்லி நிறுவனத்திற்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

1 More update

Next Story