

சென்னை,
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா நடிப்பில் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ’தாய் கிழவி’ திரைப்படம் வரும் 27-ம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. அதேபோல் ராதிகாவின் கணவரும் நடிகருமான சரத்குமார் நடித்துள்ள ’ஆழி’ படமும் அதே தேதியில் வெளியாக இருக்கிறது. ஒரே தேதியில் இரு படங்கள் வெளியாக இருப்பது எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
இந்நிலையில் நேற்று சென்னையில் ’தாய் கிழவி’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நடந்தது. இதில் ராதிகா, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டார்கள். மேலும் சரத்குமார், சிபி சக்கரவர்த்தி உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்துகொண்டார்கள்.
விழாவில் சரத்குமார் பேசியது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. அவர் பேசுகையில், "தாய் கிழவி திரைப்படம் பிப்ரவரி 20-ம் தேதி ரிலீஸாகும் என சொன்னார்கள். உடனே என்னை வைத்து ’ஆழி’ படத்தை இயக்கியிருக்கும் மாதவ் ராமதாஸிடம் சென்று தாய் கிழவி படத்தின் புரோமோஷன் எல்லாம் அதிரிபுதிரியாக இருக்கும். அந்தப் படத்தோடு நாம் மோதுவதே தவறு. ஒதுங்கிக்கொள்வதுதான் நல்லது. எனவே நாம் 27-ம் தேதி ரிலீஸ் செய்யலாம் என கூறினேன். ஆனால் விதியின் கோலம், அவர்களும் 27-ம் தேதிக்கு மாற்றிவிட்டார்கள். உன்னை நான் விடுவேனா பின்னாலேயே வந்து மோதுவேன் என்பது போல் வருகிறார்கள். இது மோதல் இல்லை ஒரு சாதனை என்று சொல்ல வேண்டும்.
பிப்ரவரி 25 1994ஆம் ஆண்டு அரண்மனை காவலன், கேப்டன் இரண்டு படங்களும் ரிலீஸாகின. அந்த இரண்டு படங்களுமே நூறு நாட்கள் ஓடின. அதற்காக ஆழி 100 நாட்கள் ஓடும் என்று சொல்லவில்லை. தாய் கிழவி நூறு நாட்கள் ஓட வேண்டும். ஏனெனில் எனது மனைவி வெற்றி பெற்றால் நான் வெற்றி பெற்றது மாதிரி" என்றார்.