

ஐதராபாத்,
புஷ்பா மற்றும் புஷ்பா 2 திரைப்படங்களின் மூலம் இந்திய அளவில் பிரபலமான நடிகர் அல்லு அர்ஜுன். இப்படங்களுக்கு முன்பே தெலுங்கில் முன்னணி நடிகராக இருந்த அல்லு அர்ஜுன், இதன் மூலம் நாடு முழுவதும் பிரபலமானார்.
தற்போது அவர், இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஒரு பெரிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் ஹாலிவுட் தரத்தில், மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வருகிறது. இதில் அல்லு அர்ஜுனுடன் தீபிகா படுகோனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிரார். மேலும், இன்னும் மூன்று நடிகைகளும் இப்படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ஒரு நடிகை அல்லு அர்ஜுன் குறித்து கூறிய கருத்து சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவர், தான் தான் அல்லு அர்ஜுனுக்கு டான்ஸ் ஆட கற்றுக்கொடுத்ததாக கூறினார். அந்த நடிகை வேறு யாருமில்லை, ராதிகா சரத்குமார் தான்.
முன்னணி நடிகையாக இருந்த ராதிகா சரத்குமார், சமீபத்தில் தாய் கிழவி படத்தில் நடித்திருந்தார். இப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதற்கிடையில், அவர் ஒரு நடன நிகழ்ச்சியில் நடுவராக இருந்தபோது, ஒரு போட்டியாளர் புஷ்பா பட பாடலுக்கு நடனம் ஆடினார்.
அப்போது பேசிய ராதிகா, “அல்லு அர்ஜுன் நல்ல டான்சராக உருவாக காரணம் நான்தான்” என்று நகைச்சுவையாக கூறினார்.
மேலும், அவர் பேசுகையில், “நான் கீதா ஆர்ட்ஸ் தயாரிப்பில் ஒரு படத்தில் நடித்தபோது, ஒரு சிறுவனை தூக்கிக்கொண்டு ரெயில் பாதையில் ஓடும் காட்சி இருந்தது. அந்த சிறுவன் வேறு யாருமில்லை அல்லு அர்ஜுன்தான். அப்போது அவரை தூக்கிக்கொண்டு ஓடினேன், அதோடு அவருக்கு டான்ஸும் கற்றுக்கொடுத்தேன்,” என்று நகைச்சுவையாக கூறினார். இந்த கருத்துகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.