

சென்னை,
'டிக்டாக்', 'டப்ஸ்மாஷ்' செயலிகளில் வீடியோக்கள் வெளியிட்டு இளசுகளை கவர்ந்தவர், மிருணாளினி ரவி. எந்த பின்புலமும் இல்லாமல் சினிமாவுக்கு வந்த மிருணாளினி ரவி 'சாம்பியன்', 'எனிமி', 'எம்.ஜி.ஆர். மகன்', 'ஜாங்கோ', 'கோப்ரா', 'ரோமியோ' ஆகிய படங்களில் நடித்து பேசப்பட்டார். தற்போது தமிழ், தெலுங்கில் பிசியாக நடித்து வரும் மிருணாளினி ரவி, தனது திரைப்பயணம் குறித்து பகிர்கிறார்.
“விளையாட்டாக ஈடுபட்ட 'டப்ஸ்மாஷ்' வீடியோக்கள், இன்ஸ்டாகிராமில் ரசிகர்களை ஈர்த்து, சினிமாவில் எனக்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தது. ஆனால் படவாய்ப்புகளுக்காக அதை நான் செய்யவில்லை. என் அதிர்ஷ்டம் என்னை சினிமாவில் புகுத்திவிட்டது. என்னை சினிமாவில் அனுப்ப தயங்கிய பெற்றோர்கள் எப்படியாவது நல்ல பெயர் வாங்குவேன் என்ற நம்பிக்கையில் என்னை அனுப்பி வைத்தார்கள்.
என் நல்ல நேரம் என்னவென்றால், நான் வந்த புதிதில் பெரியளவில் விமர்சனங்களை சந்திக்காதது தான். வந்த சிறிய விமர்சனங்களும் என்னை சற்று யோசிக்க வைத்தாலும், என்னை நானே தேற்றிக் கொள்வேன். என்னை பற்றி என்னிடம் யார் என்ன சொன்னாலும் நான் கவலைப்பட மாட்டேன். இது என் பிளஸ் பாயிண்ட் என்று கூட சொல்வேன்.
படிக்கும் காலம் படிப்பிலேயே சென்றுவிட்டது. குட்டி குட்டி காதல் விண்ணப்பம் எனக்கு வந்தது. ஆனால் எதுவும் என் மனதில் தங்கவில்லை. பெரியளவில் வாய்ப்புகள் இல்லாவிட்டாலும், மனதுக்கு பிடிக்கும் படங்களில் நடித்து மகிழ்ந்து கொள்கிறேன் . நெருக்கமான காட்சிகளில் நடிப்பதில் எனக்கு பிரச்சினை இல்லை. ஆனால் அதில் காதல் இருக்கவேண்டுமே தவிர, முகம் சுழிக்கும்படி இருக்கக்கூடாது. சவாலான கதாபாத்திரங்களில் தைரியமாக நடிப்பேன். ஏனெனில் நான் எதற்கும் கவலைப்படாத ஆளு. என்னை பொறுத்தவரை எனக்கு மனதில் சரியென பட்டதை செய்துவிடுவேன். சினிமா இல்லையென்றால் எம்.எஸ். படித்துவிட்டு அமெரிக்காவில் செட்டில் ஆகியிருப்பேன்". என்றார்.