நான் சோர்வாக இருக்க காரணம் ஆட்டோஇம்யூன் நோய் - நடிகர் விஷ்ணு விஷால்

நடிகர் விஷ்ணு விஷால் சிகிச்சையில் இருப்பதாக கூறி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நான் சோர்வாக இருக்க காரணம் ஆட்டோஇம்யூன் நோய் -  நடிகர் விஷ்ணு விஷால்
Published on

ஆட்டோஇம்யூன் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக நடிகர் விஷ்ணு விஷால் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

கிரிக்கெட் வீரரான விஷ்ணு விஷால், 2009ஆம் ஆண்டு ரிலீஸான இயக்குநர் சுசீந்திரனின் ‘வெண்ணிலா கபடி குழு’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். தொடர்ந்து தொடர்ந்து, பலே பாண்டியா, துரோகி, குள்ளநரி கூட்டம், நீர்ப்பறவை, முண்டாசுப்பட்டி, ஜீவா, ராட்சசன் , லால் சலாம் என்று ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

விஷ்ணு விஷால், ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி ரமேஷ் குடவாலாவின் மகன் ஆவார். இவர், பழம்பெரும் நடிகர் கே.நட்ராஜ் மகள் ரஜினியை காதல் திருமணம் செய்தார். பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து கொண்டார்கள். அதைத்தொடர்ந்து விஷ்ணு விஷாலுக்கும், பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா கட்டாவுக்கும் காதல் மலர்ந்தது. அதைத்தொடர்ந்து விஷ்ணு விஷால்- ஜூவாலா கட்டா இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள்

நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவான ‘கட்டா குஸ்தி 2’ திரைப்படம் வரும் ஜூலை 3ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. முதல் பாகத்தின் வெற்றியால் இரண்டாம் பாகத்திற்குப் பெரிய எதிர்பார்ப்பும் இருக்கிறது.

படத்தின் புரமோஷனுக்காக நடிகர் விஷ்ணு விஷால் நேர்காணல்களில் பங்கேற்று வருகிறார். அதனைக் கேட்ட ரசிகர்கள் விஷ்ணு விஷாலின் முகத்தில் மாறுதல்கள் ஏற்பட்டதைக் கவனித்த கேள்வியெழுப்பி வந்தனர்.

இந்த நிலையில், விஷ்ணு விஷால் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “முதலில், உங்கள் அன்புக்கும் அக்கறைக்கும் மனமார்ந்த நன்றி. சமீபத்திய என்னுடைய பதிவு அனைத்திலும் நீங்கள் சொன்ன அத்தனை காமெண்ட்ஸ்களையும் நான் பார்த்தேன். அது எனக்கு மிகவும் நெகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் அளித்தது. அதனால் இந்த விஷயத்தை உங்களுடன் நேரடியாக பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

சமீப காலமாக என் முகம் சோர்வாக இருப்பது போல இருப்பதைப் பலர் கவனித்திருக்கிறீர்கள். அதற்குக் காரணம், கடந்த 3-4 ஆண்டுகளாக நான் தன்னைத் தானே தாக்கும் (Autoimmune) நோயால் பாதிக்கப்பட்டு வருகிறேன். அதற்காக மருத்துவர்கள் பரிந்துரைத்த மருந்துகளை இடையிடையே எடுத்துக்கொண்டு வருகிறேன். அந்த மருந்துகளின் பக்கவிளைவு தான் அந்த சோர்வு. ஆனால், தற்போது நான் மேற்கொண்டு வரும் இந்த சிகிச்சை என் உடல்நலத்திற்கு மிகவும் அவசியமானது.

அதே சமயம், நீங்கள் காட்டும் அன்பும் ஆதரவும், நான் நம்பிக்கையுடன் செய்து வரும் வேலையும், மேலும் ‘கட்டா குஸ்தி 2’ படத்திற்காக இரவு பகலாக உழைத்த ஒவ்வொருவரிடமும் எனக்குள்ள பொறுப்புணர்வும் என்னை தொடர்ந்து முன்னேறச் செய்கின்றன. அதனால்தான், உடல்நிலை சவால்கள் இருந்தபோதிலும், படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்று வருகிறேன். என் உடல்நிலை விரைவில் குணமாகிவிடும். நீங்கள் காட்டிய அக்கறை, என்னை இன்னும் சிறப்பாக என் உடல்நலத்தை கவனித்துக்கொள்ள ஊக்குவித்துள்ளது. ஒவ்வொரு கமெண்ட்ஸ் மற்றும் கருத்துக்கும், ஒவ்வொரு ஆதரவுக்கும் நான் மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்கிறேன்.

இப்போது கட்டா குஸ்தி படத்தின் புரமோஷன் வேலைகளில் இறுதிகட்ட பணிகளில் நாங்கள் இருக்கிறோம். மிகுந்த நம்பிக்கையுடனும் உற்சாகத்துடனும் இருக்கிறேன். வரும் ஜூலை 3 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் "கட்டா குஸ்தி 2" படத்தை நீங்கள் அனைவரும் கண்டுகளித்திட காத்திருக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

விஷ்ணு விஷால் சிகிச்சை எடுத்துவரும் தகவல் அவரது ரசிகர்களிடம் கவலையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com