

மும்பை,
நடிகை நிமிஷா நாயர் சமீபத்தில் மும்பையின் பாந்த்ரா கிழக்கு பகுதியில், தனக்கு நடந்த அதிர்ச்சிகரமான சம்பவம் குறித்து தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். நிமிஷா நாயர் கூறியதாவது: உபேர் காரில் மும்பையில் பாந்த்ரா சாலையில் சென்று கொண்டிருந்தேன். நாங்கள் சென்ற கார் ஒரு ஸ்கூட்டரை முந்திச் சென்றது. இதனை கவனித்த ஸ்கூட்டரில் சென்ற இருவரும் கோபமடைந்து நான் பயணித்த காரை துரத்தத் தொடங்கினர். அந்த இருவரும் மதுபோதையில் இருந்திருக்க வாய்ப்பு உள்ளது. அதிகாலை காலை சுமார் 4:50 மணியளவில், கேர்வாடி ப்ளைஓவர் அருகே இந்த சம்பவம் நடைபெற்றது.
பரபரப்பான நெடுஞ்சாலையில் எங்கள் காருக்கு முன்பாக ஸ்கூட்டரை நிறுத்தினர். டிரைவரை நோக்கி மிரட்டியதுடன், காரின் கதவுகளை பலவந்தமாகத் திறக்க முயன்றதுடன், ஜன்னலை திறக்க சொல்லியும் அழுத்தம் கொடுத்தனர். எங்களுடைய பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, எதையும் செய்யவில்லை. அவர்கள் டிரைவரை தாக்க முயன்றது தெளிவாக இருந்தது.
பலர் பார்த்துக்கொண்டிருந்த அந்த நெடுஞ்சாலையிலேயே இந்த தொந்தரவு மற்றும் அச்சுறுத்தல் நடந்தது. நான் வீடியோ எடுத்ததை கவனித்தபின், அவர்கள் எங்கள் காரின் புகைப்படத்தை எடுத்து விட்டு அங்கிருந்து சென்றனர்,” என்று தெரிவித்துள்ளார். மும்பை காவல்துறையை டேக் செய்து இந்த பதிவை அவர் போட்டுள்ளார். நடிகை நிமிஷா நாயரின் பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மும்பையில் பொதுமக்களின் பாதுகாப்பு குறித்து நெட்டிசன்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.