

சென்னை,
தயாரிப்பு மற்றும் விநியோக ஒப்பந்தத்தை மீறி டிமான்டி காலனி 3 படத்தை தங்களுக்கு தெரியாமல் தயாரித்து வெளியிட முயன்றதாக தயாரிப்பாளர் விஜயா சுப்பிரமணியன் டிமான்டி காலனி 3 படத்திற்கு எதிராக மனு தாக்கல் செய்துள்ளார்.
அருள்நிதி நடிப்பில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியான படம் ‘டிமான்ட்டி காலனி’. இந்த படத்தை அஜய் ஞானமுத்து இயக்கியிருந்தார். ஹாரர் திரில்லர் கதை களத்தில் வெளியான இந்த படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதைத்தொடர்ந்து கிட்டத்தட்ட 10 வருடங்கள் கழித்து ‘டிமான்ட்டி காலனி’ படத்தின் இரண்டாம் பாகம் வெளியானது.
அஜய் ஞானமுத்து இயக்கிய ‘டிமான்ட்டி காலனி 2’ படத்தில் அருள்நிதி, பிரியா பவானி சங்கர், அருண்பாண்டியன், விஜே அர்ச்சனா, மீனாட்சி கோவிந்தராஜன், முத்துக்குமார் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த படமும் நல்ல வரவேற்பை பெற்றது.
அதனை தொடர்ந்து தற்போது ‘டிமான்ட்டி காலனி’ படத்தின் 3-ம் பாகம் உருவாகியுள்ளது. விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து, ரிலீசுக்கான வேலைகள் வேகமாக நடைபெற்று வந்தன. முதல் மற்றும் இரண்டாம் பாகங்களுக்குக் கிடைத்த வரவேற்பு காரணமாக 3 ஆம் பாகத்தின் வெளியீட்டுக்கும் எதிர்பார்ப்பு இருக்கிறது. இப்படம் அக்டோபார் 1-ந் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. ‘ஏ’ தணிக்கை சான்றிதழ் பெற்றுள்ள இந்த படத்தை திரில்லர் படத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்த நிலையில், `டிமான்டி காலனி 3' படத்தை வெளியிட சென்னை ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. அதாவது, அனுமதியின்றி `டிமான்டி காலனி 3' தயாரிக்கப்பட்டு தணிக்கை சான்று பெற்றதாக இணை தயாரிப்பாளர் விஜயா சுப்பிரமணியன்(வொயிட் நைட் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம்) சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், தயாரிப்பு மற்றும் விநியோக ஒப்பந்தத்தை மீறி `டிமான்டி காலனி 3' படத்தை தங்களுக்கு தெரியாமல் தயாரித்து வெளியிட முயன்றதாகவும், வேறொரு நிறுவனம் மூலம் படத்தை தயாரித்து ஓடிடிக்கு விற்றதாகவும் மனுவில் கூறியுள்ளனர். மேலும் பிரச்சினைக்கு தீர்வு காணும் வரை படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.
இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு `டிமான்டி காலனி 3' திரைப்படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும், இயக்குநர் அஜய் ஞானமுத்து மற்றும் படக்குழு இது தொடர்பாக 4 வாரத்தில் உரிய பதிலளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டப்பட்டுள்ளது.