

ஐதராபாத்,
இந்திய சினிமாவின் பிரம்மாண்ட படைப்புகளில் ஒன்றான 'பாகுபலி' திரைப்படத்தின் 3-வது பாகம் உருவாகுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் மீண்டும் அதிகரித்துள்ளது.
பிரபல ஓடிடி தளமான நெட்பிளிக்ஸில் பாகுபலி - தி டார்ச்பியரர் என்ற அந்த ஆவண தொடர் இன்று வெளியாகி உள்ளது. இந்த தொடரில் பிரபாஸ், அனுஷ்கா ஷெட்டி, ராணா டகுபதி ஒன்றாக அமர்ந்து பேசிய ஒரு கிளிப் தற்போது வைரலாகி வருகிறது.
அதில் நடிகர் பிரபாஸ் சிரித்துக்கொண்டே மூன்று விரல்களை காட்டினார். பிரபாஸின் இந்த சைகை, 'பாகுபலி 3' குறித்த முக்கிய அப்டேட்டாக இருக்கலாம் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும், அந்த வீடியோவின் இறுதியில் "பாரம்பரியம் தொடர்கிறது" (The Legacy Continues) என்ற வாசகம் இடம்பெற்றிருப்பதும், மூன்றாம் பாகம் குறித்த எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.
எனினும், 'பாகுபலி 3' திரைப்படம் தொடர்பாக படக்குழு தரப்பில் இதுவரை எந்த அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இருப்பினும், பிரபாஸின் சைகை மற்றும் வீடியோவில் இடம்பெற்ற வாசகம் காரணமாக, விரைவில் புதிய அறிவிப்பு வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.