

சென்னை,
நடிகர் விஜய் நடிப்பில், இயக்குனர் ஹெச். வினோத் இயக்கியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆரம்பத்தில் இந்தப் படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என கூறப்பட்ட நிலையில், தணிக்கை தொடர்பான நடைமுறைகள் காரணமாக அதன் வெளியீடு தள்ளிப்போயுள்ளது.
படம் முழுமையாக தயாராக இருந்தாலும், இதுவரை ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கப்படவில்லை. இதன் காரணமாக படத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்படாமல் உள்ளது. இதனால் ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களும் அடுத்த அறிவிப்புக்காக காத்திருக்கின்றனர்.
விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு ஜூன் 19 அல்லது ஜூன் 22-ம் தேதியை ஒட்டி படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் சென்சார் சான்றிதழ் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக அந்த திட்டம் சாத்தியமாகுமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.
தற்போது ‘ஜனநாயகன்’ படக்குழு டெல்லியில் சென்சார் சான்றிதழ் பெறுவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. ஜூன் 19-க்குள் சான்றிதழ் கிடைத்தால், ஜூன் 26-ம் தேதி படத்தை வெளியிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒருவேளை அதிலும் தாமதம் ஏற்பட்டால், அதிகபட்சமாக ஜூலை 3-க்குள் படம் திரையரங்குகளில் வெளியாகும் என திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விஜய்யின் அரசியல் மற்றும் திரை பயணத்தை ஒருங்கிணைக்கும் முக்கிய படமாக கருதப்படும் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு அறிவிப்புக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.