நடிகர்கள் மீதான பாலியல் புகாரை வாபஸ் பெற்ற மலையாள நடிகை

கேரள அரசின் அலட்சியத்தால் நடிகர்கள் முகேஷ், ஜெயசூர்யா உள்பட 7 பேர் மீது தான் கொடுத்த பாலியல் புகாரை வாபஸ் பெறுவதாக நடிகை அறிவித்துள்ளார்.
நடிகர்கள் மீதான பாலியல் புகாரை வாபஸ் பெற்ற மலையாள நடிகை
Published on

திருவனந்தபுரம்,

ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானதை தொடர்ந்து மலையாள சினிமாவில் பெண்கள் பலரும் தாங்கள் எதிர்கொண்ட பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து வெளிப்படையாக பேசினர். பலர் புகார் கொடுத்தனர். அந்த வகையில் ஆகஸ்ட் மாதம் இறுதியில், நடிகரும் கொல்லம் தொகுதி எம்எல்ஏவுமான முகேஷ், ஜெயசூர்யா, இடவேள பாபு, மணியம்பிள்ளை ராஜூ உள்பட 7 பேர் மீது ஆலுவாவைச் சேர்ந்த நடிகை ஒருவர் பாலியல் புகார் அளித்தார். தொடர்பாக வழக்கும் பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், கேரள அரசின் அலட்சியம் காரணமாக தான் அளித்த பாலியல் புகாரை வாபஸ் பெறுவதாக அந்த நடிகை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், "கேரள அரசின் அலட்சியத்தாலும், போதிய ஆதரவின்மையாலும் பாலியல் புகார் அளிக்க முன்வந்த ஒரே காரணத்தால், என்னால் தாங்க முடியாத பல கஷ்டங்களை அனுபவித்து விட்டேன். சமூக வலைதளங்களில் என் மீது அவதூறு பரப்புகிறார்கள். நான் மனதளவில் சோர்வடைந்துவிட்டேன். எனவே நான் இனியும் தொடர்ந்து இந்த வழக்கை நடத்த விரும்பவில்லை. இதைச் சொல்வதால் நான் யாரிடமும் சமரசம் செய்துகொண்டேன் என்று அர்த்தமில்லை. பாலியல் புகார் தொடர்பாக டிஜிபி உள்ளிட்ட அதிகாரிகளையும் தொடர்பு கொண்டேன். ஆனால், எனக்கு போதிய ஆதரவு கிடைக்கவில்லை" என தெரிவித்துள்ளார்.

இதனிடையே, அந்த நடிகை மீது அண்மையில் அவரது, சொந்த உறவின பெண் ஒருவரே போக்சோ புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், "நான் பருவ வயதை எட்டுவதற்கு முன்பே சினிமாவில் வாய்ப்புகளை பெற்று தருவதாக கூறி என்னை பாலியல் தொழிலுக்கு உட்படுத்தினார்" என குற்றம்சாட்டியிருந்தார். இதையடுத்து, அந்த நடிகை மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இது குறித்து அந்த நடிகை கூறுகையில், "என் மீது பதிவு செய்யப்பட்டுள்ள போக்சோ வழக்கு முற்றிலும் பொய்யானது மற்றும் ஜோடிக்கப்பட்டது. இது பொய்யென நிரூபிக்க காவல் துறை தவறிவிட்டது. மேலும் என் தரப்பு விளக்கத்தை கூட காவல் துறை கேட்கவில்லை. இவையெல்லாம் என்னை மிரட்ட மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள். இனிமேலும் என்னால் தாங்க முடியாது. நான் கொடுத்த அனைத்து பாலியல் புகார்களையும் வாபஸ் பெறுகிறேன்" என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com