கிச்சா சுதீப்பின் “தேவராயா” திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

கிச்சா சுதீப் நாயகனாக நடிக்கும் ‘தேவராயா’ திரைப்படத்தின் டைட்டில் அறிவிப்பு வீடியோ வெளியாகியுள்ளது.
கிச்சா சுதீப்பின் “தேவராயா” திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
Published on

கிச்சா சுதீப் நடிக்கும் ‘தேவராயா’ திரைப்படம் 2027 டிசம்பர் வெளியீடாக திரைக்கு வரும் என்பதை படக்குழு அறிவித்துள்ளது.

கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் கிச்சா சுதீப். இவர் நான் ஈ, அருந்ததி, புலி ஆகிய திரைப்படங்களில் வில்லனாக நடித்து தமிழ் மக்களின் மனதில் பதிந்தார். இவரது நடிப்பில் வெளியான ‘மேக்ஸ்’ திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இப்படத்தை விஜய் கார்த்திகேயா இயக்கினார். விஜய் கார்த்திகேயா இயக்கத்தில் கிச்சா சுதீப்பின் 47- வது திரைப்படமாக ‘மார்க்’ வெளியானது. இறுதியாக, ‘மேக்ஸ்’ என்கிற வெற்றிப்படத்தை கொடுத்தார். தற்போது, அனூப் பந்தாரி இயக்கத்தில் ‘பில்லா ரங்கா பாட்ஷா’ என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார். கிச்சா சுதீப் சினிமாவில் 30 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார்.

இந்த நிலையில், கிச்சா சுதீப்பின் பிறந்த நாளை முன்னிட்டு புதிய அறிவிப்பு வெளியானது. விஜயநகரப் பேரரசின் மாபெரும் மன்னனான ஸ்ரீ கிருஷ்ணதேவராயரின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவாகும் ‘தேவராயா’ என்று புதிய திரைப்படத்தில் அவர் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இப்படம் 2027 டிசம்பர் வெளியீடாகத் திரைக்கு வரும் என்பதை படக்குழு அறிவித்துள்ளது.

பீப்பிள் மீடியா பேக்டரி மற்றும் சுப்ரியன்வி பிக்சர் ஸ்டுடியோ கிச்சா இப்படத்தை தயாரிக்கிறது. இத்திரைப்படத்தின் டைட்டில் அறிவிப்பு வீடியோ வெளியாகியுள்ளது.

டைட்டில் வீடியோ மற்றும் சுதீப்பின் மிரட்டலான தோற்றம்

நடிகர் சுதீப்பின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழுவினர் வெளியிட்டுள்ள பிரத்யேக டைட்டில் அறிவிப்பு வீடியோ, படத்தின் பிரம்மாண்டத்தை எதிர்பார்க்க வைக்கிறது. பாரம்பரிய அரச உடையில், நவரத்தினங்கள் மற்றும் முத்துக்கள் பதிக்கப்பட்ட பிரம்மாண்ட கிரீடத்துடன் சுதீப் கம்பீரமாகத் தோன்றும் பர்ஸ்ட் லுக் காட்சிகள் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளன.

இந்த ஆரம்பக்கட்ட வீடியோவில் சண்டைக் காட்சிகளோ அல்லது வசனங்களோ எதுவும் இடம்பெறவில்லை. மாறாக, சுதீப்பின் முகபாவனைகளும், அவரது கம்பீரமான நிற்கும் தோரணையும் மட்டுமே அந்த மாமன்னரின் ஆளுமையை அப்படியே பிரதிபலிக்கிறது.

கௌரா ஹரி கே-வின் பின்னணி இசையும், காலகட்டத்தை அப்படியே பிரதிபலிக்கும் கலை இயக்கமும் படத்திற்கு மிகப் பெரிய பலமாக அமைந்துள்ளது.

படக்குழுவினர் இந்தத் திரைப்படத்தை “வரலாற்றை செதுக்கிய ஒரு பேரரசு. ஒரு சகாப்தத்தை வரையறுத்த ஒரு ம மன்னன். காலத்தைக் கடந்து வாழும் ஒரு ஜாம்பவான்” என்ற மூன்று வரிகளுடன் அறிமுகப்படுத்தியுள்ளனர்.

இத்திரைப்படத்தின் இயக்குநர் மற்றும் நடிகர், நடிகைகள் யார் என்பது குறித்த விவரங்களை படக்குழுவினர் வெளியிட வில்லை.

X

Daily Thanthi
www.dailythanthi.com