‘கிருஷ்ணாவதாரம்’ திரைப்படத்தை நிரந்தர கலைப்படைப்புகளாக மாற்றும் புதிய முயற்சி

‘கிருஷ்ணாவதாரம்’ திரைப்படத்தின் முக்கிய காட்சிகள் நிரந்தர கலைப்படைப்புகளாக மறுஉருவாக்கம் செய்யப்படுகின்றன.
‘கிருஷ்ணாவதாரம்’ திரைப்படத்தை நிரந்தர கலைப்படைப்புகளாக மாற்றும் புதிய முயற்சி
Published on

இந்திய சினிமாவையும் பாரம்பரிய கலை மரபையும் இணைக்கும் வகையில், ‘கிருஷ்ணாவதாரம்’ திரைப்படத்தை தயாரித்த கிரியேட்டிவ்லேண்ட் ஸ்டுடியோஸ், முன்னணி கலைக்கூடங்களுடன் இணைந்து, திரைப்படத்தின் 150 முக்கிய காட்சிகளை லித்தோகிராஃப் அச்சுப்படங்களாக வெளியிடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

இந்த பிரத்யேக முயற்சி, ராஜா ரவி வர்மாவின் காலத்தால் அழியாத கலைப் பாரம்பரியத்திலிருந்து ஈர்க்கப்பட்டதாகும். டெல்லியில் நடைபெற்ற ‘கிருஷ்ணாவதாரம்’ திரைப்படத்தின் சிறப்புத் திரையிடலில், இந்த அச்சுப்படங்களின் முதல் தொகுப்பு வெளியிடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கலை, கலாச்சாரம், ஆன்மீகம், அரசு நிர்வாகம் மற்றும் பெருநிறுவன துறைகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து தயாரிப்பாளர் சஜன் ராஜ் குருப் கூறுகையில், “கிருஷ்ணாவதாரத்தின் ஒவ்வொரு காட்சியும் ஒரு ஓவியமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு தருணத்தை மட்டுமல்ல, அதனுடன் இணைந்த உணர்வையும் பதிவு செய்வதே எங்களின் நோக்கம். இந்த முயற்சி, அந்தக் காட்சிகளை திரையைத் தாண்டி நிரந்தரமான கலாச்சார வடிவமாக மாற்ற உதவுகிறது. ராஜா ரவி வர்மா தனது கல் அச்சுப் படங்கள் மூலம் தெய்வீகத்தை மக்களின் இல்லங்களுக்குள் கொண்டு வந்தது போல, நாங்களும் அந்த மரபை புதிய தலைமுறைக்கு புதுமையாக அறிமுகப்படுத்த விரும்புகிறோம்,” என்றார்.

ராஜா ரவி வர்மாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க கல் அச்சுப் படங்கள் இந்திய இல்லங்களில் புராணக் கதைகளை உயிர்ப்பித்தது போலவே, ‘கிருஷ்ணாவதாரம்’ திரைப்படத்தின் முக்கிய தருணங்களும் இப்போது நிரந்தர கலைப்படைப்புகளாக மறுஉருவாக்கம் செய்யப்படுகின்றன.

தேர்ந்தெடுக்கப்பட்ட காட்சிகள் அனைத்தும் ஓவிய நயமிக்க அமைப்பு, உணர்ச்சி ஆழம் மற்றும் கலாச்சார தாக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் தொகுக்கப்பட்டுள்ளன. இதில் கிருஷ்ணரின் வாழ்க்கை பயணத்தின் முக்கிய தருணங்கள், தெய்வீக காட்சிகள் இடம்பெறுகின்றன.

இந்தக் காட்சிகள் அருங்காட்சியகத் தரத்தில் லித்தோகிராஃப் அச்சுப்பிரதிகளாக உருவாக்கப்படவுள்ளன. மேலும், இந்த அச்சுப்பிரதிகள் அனைத்தும் வரையறுக்கப்பட்ட எண்ணிக்கையிலான, எண்ணிடப்பட்ட பதிப்புகளாக வெளியிடப்படவுள்ளன. ஒவ்வொன்றுடனும் நம்பகத்தன்மைச் சான்றிதழ் வழங்கப்படும். இதனால் கலை ஆர்வலர்கள், சினிமா ரசிகர்கள் மற்றும் ஆன்மீக சேகரிப்பாளர்கள் மத்தியில் இவை அரிய சேகரிப்புப் பொருட்களாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனுடன், பிரத்யேக கலைக்கூடக் காட்சிகள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஏல நிகழ்வுகள் தொடர்பாகவும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. இதன் மூலம் பார்வையாளர்கள் ‘கிருஷ்ணாவதாரம்’ திரைப்படத்தை ஒரு உயிரோட்டமான கலைக் கண்காட்சியாக அனுபவிக்கும் வாய்ப்பு கிடைக்கும்.

இந்த முயற்சி குறித்து படைப்புக் குழுவினர் கூறுகையில், “ராஜா ரவி வர்மா லித்தோகிராஃப்கள் மூலம் தெய்வீகப் படிமங்களை மக்களிடம் கொண்டு சென்றார். ‘கிருஷ்ணாவதாரம்’ மூலம் அந்த மரபை நாங்கள் புதிய வடிவில் தொடர்கிறோம். திரைப்படக் காட்சிகளை மக்கள் சேகரித்து பாதுகாக்கக்கூடிய காலத்தால் அழியாத கலைப்படைப்புகளாக மாற்றுவதே எங்களின் நோக்கம்,” என தெரிவித்தனர்.

இந்த முன்னெடுப்பு, ‘கிருஷ்ணாவதாரம்’ திரைப்படத்தை வெறும் சினிமாவாக மட்டுமல்லாமல், கலை, புராணம் மற்றும் கலாச்சாரத்தை இணைக்கும் ஒரு புதிய காட்சி இயக்கமாக நிலைநிறுத்துகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com