பழம்பெரும் நடிகர் கோட்டா ஸ்ரீனிவாச ராவ் மறைவு; சந்திரபாபு நாயுடு நேரில் இரங்கல்

7 நந்தி விருதுகளை பெற்றுள்ள அவர், 5 ஆண்டுகள் எம்.எல்.ஏ.வாகவும் இருந்துள்ளார் என ஆந்திர பிரதேச முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.
ஐதராபாத்,
தெலுங்கு திரையுலகின் பழம்பெரும் நடிகர் கோட்டா ஸ்ரீனிவாச ராவ் (வயது 83). பல படங்களில் குணசித்திர வேடம், வில்லன் கதாபாத்திரங்களை ஏற்று நடித்து ரசிகர்களிடையே பிரபலம் அடைந்தவர். இந்நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக இன்று அதிகாலை 4 மணியளவில் காலமானார். தெலுங்கானாவின் ஐதராபாத்தில் உள்ள அவருடைய வீட்டில் வைக்கப்பட்ட உடலுக்கு, நடிகர்கள் சிரஞ்சீவி, பிரகாஷ்ராஜ், பவன் கல்யாண் மற்றும் முன்னாள் குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு உள்ளிட்ட பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
கடந்த 2003-ம் ஆண்டு ஹரி இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் தமிழில் வெளியான படம் 'சாமி'. இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதில் 'பெருமாள் பிச்சை' என்ற வில்லன் கதாபாத்திரத்தில் தனது தனித்துவ நடிப்பால் ரசிகர்களின் கவனம் ஈர்த்தவர் நடிகர் கோட்டா ஸ்ரீனிவாச ராவ். அவருக்கு தமிழில் இதுதான் முதல் படம்.
தொடர்ந்து அவர் தமிழில், 'குத்து', 'ஜோர்', 'ஏய்', 'திருப்பாச்சி', 'பரமசிவன்', 'சத்யம்', 'கோ', 'சாமி 2', 'காத்தாடி' என பல படங்களில் நடித்து தனது வில்லத்தனத்தால் பாராட்டு பெற்றவர். நடிகர், பாடகர், டப்பிங் கலைஞர் என பன்முக திறமை கொண்டவர். மொத்தம் 750 படங்களுக்கும் மேல் நடித்திருக்கிறார். இவரது நடிப்பில் கடைசியாக 2023-ம் ஆண்டு 'சுவர்ண சுந்தரி' என்ற படம் வெளியானது.
இந்நிலையில், மறைந்த நடிகர் கோட்டா ஸ்ரீனிவாச ராவுக்கு, ஆந்திர பிரதேச முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு நேரில் சென்று இரங்கல் தெரிவித்தார். இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது, கோட்டா ஸ்ரீனிவாச ராவ் ஒரு சிறந்த நடிகர். அவருடைய இடத்தை வேறு யாராலும் நிரப்ப முடியாது. கடந்த 4 தசாப்தங்களாக கன்னடம், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என 750-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 7 நந்தி விருதுகளை பெற்றுள்ள அவர், 5 ஆண்டுகள் எம்.எல்.ஏ.வாகவும் இருந்துள்ளார்.
நான் முதல்-மந்திரியாக இருந்தபோது, மக்கள் பிரதிநிதியாக அவருடன் இணைந்து பணியாற்றிய தருணம் மகிழ்ச்சியானது. அவர் மிகப்பெரிய அளவில் மக்கள் பணியை ஆற்றியுள்ளார் என்றார்.
இதேபோன்று அரியானா கவர்னர் பண்டாரு தத்தாத்ரேயாவும், மறைந்த நடிகர் கோட்டா ஸ்ரீனிவாச ராவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். இதன்பின்னர், ஆந்திர பிரதேச முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவும், அரியானா கவர்னர் பண்டாரு தத்தாத்ரேயாவும் ஒருவரையொருவர் சந்தித்து பேசி கொண்டனர்.






