

மலையாளத்தில் வெளியாகி ரூ.100 கோடிக்கு மேல் வசூல் குவித்த ‘பிரேமலு’ படத்தின் மூலம் ரசிகர்கள் மனதை கொத்தாக அள்ளிய இளம் கதாநாயகி மமிதா பைஜு. இவர் டியூட், ஜனநாயகன், கர படத்தில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் தனி இடத்தை பிடித்துள்ளார்.. தெலுங்கு மற்றும் மலையாளத்திலும் பிசியாக படங்கள் நடித்து வருகிறார். சூர்யாவுடன் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’படத்தில் நடித்து வருகிறார். ‘இரண்டு வானம்’ படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.
விஜய்யின் ‘ஜன நாயகன்’ இசை வெளியீட்டு விழாவின் போது மேடையில் உற்சாகமாக நடனமாடிய மமிதா பைஜு , ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க ‘அழகிய தமிழ் மகன்’ படத்தில் இடம்பெற்ற ‘எல்லா புகழும் ஒருவனுக்கே...’ பாடலின் சில வரிகளைப் பாடினார். அந்தக் காணொளி இணையத்தில் வைரலாகி, ட்ரோல் செய்யப்பட்டது.
இதற்கிடையில் நிகழ்ச்சி ஒன்றில் மமிதா பைஜூ பேசிய கருத்துக்கள் கவனம் ஈர்த்துள்ளன. “என்னுடைய ரசிகர்களுக்கு நினைவில் நிற்கும் படங்களை வழங்க வேண்டும் என்பதுதான் என்னுடைய லட்சியம். அதோடு ஒரு அன்பான குடும்பத்தை உருவாக்க வேண்டும். என்றாவது என்னுடைய கடந்த காலத்தை நினைத்து பார்க்கும்போது, உண்மையான மகிழ்ச்சி, அமைதி, திருப்தி எனக்கு இருக்க வேண்டும். அதை நோக்கிதான் என்னுடைய பயணம்” என்று மமிதா பைஜு குறிப்பிட்டுள்ளார்.