

மும்பை,
படப்பிடிப்பின்போது நடிகை ஷெஹ்னாஸ் கில்லுக்கு எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
பிரபல பஞ்சாபி நடிகை ஷெஹ்னாஸ் கில், இந்தி மற்றும் பஞ்சாபி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடித்து வருகிறார். மேலும், சில பஞ்சாபி திரைப்படங்களிலும் நடித்து வரும் அவர், தற்போது ‘இஷ்க்நாமா’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பின்போது எதிர்பாராத சம்பவம் ஒன்று நடந்துள்ளது. ஷெஹ்னாஸ் கில் அணிந்திருந்த மூக்குத்தி திடீரென கழன்று அவரது வாய்க்குள் சென்று தொண்டையில் சிக்கிக் கொண்டது.
இதை கண்ட சக நடிகர் சௌரப் சச்தேவா உடனடியாக ஓடிவந்து அவரது முதுகை தட்டிக் கொடுத்து உதவினார். இந்த எதிர்பாராத சம்பவத்தால் படப்பிடிப்பு தளத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும், சம்பவத்துக்கு பிறகு சிறிது நேரத்தில் ஷெஹ்னாஸ் கில் மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோவையும் அவர் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.