

படித்த அகதிகளில் இருந்து வெறும் 1 சதவீத பேருக்கு மட்டுமே தங்களின் தகுதிக்கு ஏற்ற வேலை கிடைப்பதாக ஹிப்ஹாப் ஆதி தெரிவித்துள்ளார்.
உலக அகதிகள் தினத்தை முன்னிட்டு, ஐக்கிய நாடுகளின் அகதிகள் முகமை (UNHCR) மற்றும் தென்னிந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை சபை இணைந்து சென்னை ரிப்பன் கட்டிடம் அருகே உள்ள வரலாற்று சிறப்புமிக்க விக்டோரியா பப்ளிக் ஹாலில் சிறப்பு நிகழ்ச்சி ஒன்றை நடத்தின. இந்நிகழ்ச்சியில் பிரபல திரைப்பட நடிகரும், இசையமைப்பாளருமான ஹிப்ஹாப் தமிழா ஆதி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
மறுவாழ்வு முகாம்களில் உள்ள அகதிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது மற்றும் அவர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு, UNHCR மற்றும் SICCI அமைப்புகள் இணைந்து உருவாக்கிய 'கூட்டாண்மை மன்றத்தின்' ஓராண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பேசிய ஹிப்ஹாப் ஆதி, அகதிகள் எதிர்கொள்ளும் சமூகப் புறக்கணிப்புகள் மற்றும் வேலைவாய்ப்புச் சிக்கல்கள் குறித்துத் தனது ஆதங்கத்தைப் பகிர்ந்து கொண்டார்.
“அகதிகள் மறுவாழ்வு முகாம்களில் இருந்து சுமார் 2,000-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தங்களது உயர்கல்வியை வெற்றிகரமாக முடித்து வெளிவருகின்றனர். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அவர்களில் வெறும் 1 சதவீத பேருக்கு மட்டுமே தங்களின் தகுதிக்கு ஏற்ற வேலை கிடைக்கிறது. இடப்பெயர்வு மற்றும் முகாம் வாசிகள் என்ற சமூக முத்திரை காரணமாகவே அவர்களுக்கு இந்த அநீதி நடக்கிறது” என்று குறிப்பிட்டார்.
முகாம்களில் வசிக்கும் இளைஞர்கள் தங்களுக்குச் சமூகம் கொடுக்கும் தீர்ப்புகளுக்குப் பயந்து, தங்களது உண்மையான அடையாளத்தை வெளியே சொல்ல முடியாமல் மறைத்து வாழும் சூழல் இன்றும் நீடிப்பதாகத் தெரிவித்தார்.
நிகழ்ச்சியின் போது வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, இந்தியாவிலேயே அதிக அளவாகத் தமிழ்நாட்டில் மட்டும் 29 மாவட்டங்களில் 103 அகதிகள் முகாம்கள் செயல்பட்டு வருகின்றன என்பதும், அங்கு பல்லாயிரக்கணக்கான இலங்கைத் தமிழ் அகதிகள் மறுவாழ்வு பெற்று வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அகதிகள் மீதான சமூகப் பார்வையை மாற்றி, அவர்களது கல்வித் தகுதிக்கேற்ப கார்ப்பரேட் நிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை வழங்க முன்வர வேண்டும் என்ற கோரிக்கையுடன் இந்த நிகழ்ச்சி நிறைவடைந்தது.