'நல்லதே நடக்கும் வெற்றி நிச்சயம்'- விஜய்க்கு நடிகர் சிபி சத்யராஜ் ஆதரவு

பிரபலங்கள் பலரும் ஜனநாயகன் படத்திற்கு ஆதரவாக தங்களில் குரல் கொடுத்து வருகின்றனர்.
சென்னை,
"இயக்குநர் எச்.வினோத். விஜய்யை வைத்து 'ஜனநாயகன்' படத்தை இயக்கி உள்ளார். நடிகர் விஜய் அரசியலுக்கு வந்து ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற கட்சியை தொடங்கிய நிலையில், சினிமாவை விட்டு முழுவதுமாக விலகுவதாக அறிவித்தார். இந்நிலையில், ‘ஜனநாயகன்’ திரைப்படமே விஜயின் கடைசி படம் என்பதால், இந்த படத்திற்கு விஜய் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்த படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, இந்த திரைப்படம் வருகிற 9-ந்தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. 'ஜனநாயகன்' படத்திற்கான அனைத்து பணிகளையும் முடித்து, படத்தை கடந்த மாதம் தணிக்கை வாரியத்திற்கு படக்குழு அனுப்பியது. ஆனால் இந்த படத்திற்கு இதுவரை தணிக்கை சான்றிதழ் கிடைக்கவில்லை.
தணிக்கை சான்றிதழ் வழங்கப்படாததை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், படத்தை தயாரித்துள்ள கே.வி.என். நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை நேற்று விசாரித்த சென்னை ஐகோர்ட்டு ஜன நாயகன் படத்திற்கான தணிக்கை சான்றிதழ் வழக்கில் நாளை (9-ந்தேதி) தீர்ப்பு வழங்கப்படும் என்று உத்தரவிட்டது. இதனால் திட்டமிட்டபடி, ஜனவரி 9-ந்தேதி ‘ஜனநாயகன்’ வெளியாகாது என பட தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதற்கிடையில், பிரபலங்கள் பலரும் ஜனநாயகன் படத்திற்கு ஆதரவாக தங்களில் குரல் கொடுத்து வருகின்றனர். அந்த வகையில், நடிகர் சிபி சத்யராஜ், விஜய்க்கு ஆதரவாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "ஜனநாயகன் ரிலீஸைச் சுற்றி நடக்கும் அனைத்து நிகழ்வுகளும் ஒரு மாபெரும் வெற்றிக்கான சரியான களத்தை அமைத்துக் கொண்டிருக்கின்றன. நம்பிக்கையோடு இருங்கள்.. நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம்!" என்று பதிவிட்டுள்ளார்.






