

சென்னை,
திரையுலகில் எப்போதும் வித்தியாசமான முயற்சிகளை மேற்கொள்ளும் நடிகர் பார்த்திபன், நிஜ வாழ்விலும் ஒரு முன்னோடி நடவடிக்கையாகத் தான் எந்தச் சாதியையும், மதத்தையும் சாராதவர் என்ற அதிகாரபூர்வ அரசுச் சான்றிதழைப் பெற்றுள்ளார்.
சாதி மற்றும் மத அடிப்படையிலான பிளவுகள் தேச ஒற்றுமைக்குப் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. எனவே, மற்றவர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழும் வகையில், தன்னை "சாதி - மதமற்றவர்" என அறிவித்துச் சான்றிதழ் வழங்கக் கோரி நடிகர் பார்த்திபன் சென்னை ஐகோர்ட்டில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
முன்னதாக, சோழிங்கநல்லூர் வட்டாட்சியரிடம் அவர் அளித்த விண்ணப்பம் பரிசீலிக்கப்படாத நிலையில், கோர்ட்டை அவர் நாடினார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம். தண்டபாணி, நடிகர் பார்த்திபனின் கோரிக்கையை ஏற்று, அவருக்கு ஒரு வார காலத்திற்குள் "சாதி, மதம் அற்றவர்" என்பதற்கான சான்றிதழை வழங்குமாறு சோழிங்கநல்லூர் வட்டாட்சியருக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்திருந்தார்.
கோர்ட்டு உத்தரவின் அடிப்படையில், கடந்த 27-ம் தேதி சோழிங்கநல்லூர் வட்டாட்சியர், பார்த்திபன் எந்தச் சாதியையும் மதத்தையும் சாராதவர் எனச் சான்றிதழ் வழங்கினார். இதன் மூலம் சட்டபூர்வமாகத் தனது சாதி, மத அடையாளங்களை அவர் துறந்துள்ளார்.
இந்த வழக்கு இன்று (ஏப்ரல் 29) மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது. அப்போது, சான்றிதழ் வழங்கப்பட்ட விவரம் கோர்ட்டில் அதிகாரபூர்வமாகத் தெரிவிக்கப்பட உள்ளது.