நடிகை மோனலிசா, கணவருக்கு வழங்கிய போலீஸ் பாதுகாப்பு ரத்து

மோனலிசா தம்பதிக்கு போலீஸ் பாதுகாப்பை ரத்து செய்து கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகை மோனலிசா, கணவருக்கு வழங்கிய போலீஸ் பாதுகாப்பு ரத்து
Published on

எர்ணாகுளம்,

கும்பமேளாவில் இருந்து வைரலான மோனலிசா

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த மோனலிசா, கும்பமேளாவில் தனது குடும்பத்தினருடன் பாசி மாலை விற்பனை செய்து வந்தபோது, அவரது அழகிய தோற்றம் சமூக வலைதளங்களில் வைரலானது. யூடியூபர் ஒருவர் வெளியிட்ட வீடியோவின் மூலம் அவர் ஒரே இரவில் இணையத்தில் பிரபலமானார். அவரது கண்களின் அழகைக் கண்டு நெட்டிசன்கள் அவருக்கு 'மோனலிசா போஸ்லே' என்ற பெயரையும் சூட்டினர்.

சமூக வலைதள புகழைத் தொடர்ந்து மோனலிசாவுக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைத்தன. இதற்காக அவர் மும்பைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, புதிய தோற்றத்துடன் சினிமாவில் அறிமுகமானார். மேலும், பல்வேறு நிகழ்ச்சிகளிலும் சிறப்பு விருந்தினராக பங்கேற்று வந்தார்.

காதல் திருமணத்துக்குப் பிறகு பாதுகாப்பு கோரி மனு

சமீபத்தில் முகமது பர்மானை காதல் திருமணம் செய்து கொண்ட மோனலிசா, தங்களது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி கணவருடன் கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், இருவருக்கும் போலீஸ் பாதுகாப்பு வழங்குமாறு எர்ணாகுளம் மத்திய போலீசாருக்கு இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.

முகவரியில் இல்லை... தொடர்பும் இல்லை

இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மோனலிசாவும் அவரது கணவரும் மனுவில் குறிப்பிட்ட முகவரியில் வசிக்கவில்லை என்றும், அவர்கள் வழங்கிய செல்போன் எண்ணிலும் தொடர்புகொள்ள முடியவில்லை என்றும் அரசு தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, மோனலிசா மற்றும் அவரது கணவருக்கு வழங்கப்பட்டிருந்த போலீஸ் பாதுகாப்பை கேரள உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com