

நடிகர் சூர்யாவின் 45-வது படம் ‘கருப்பு’ . இந்தப் படத்தை ஆர்.ஜே. பாலாஜி இயக்கியுள்ளார். இப்படத்தில் ஹீரோயினாக திரிஷா நடித்துள்ளார். மேலும் நட்டி, இந்திரன்ஸ், சுவாசிகா, யோகி பாபு உள்ளிட்டோரும் ‘கருப்பு’ படத்தில் இடம் பெற்றுள்ளனர். சாய் அபயங்கர் இசையமைத்திருக்கும் இப்படம் கடந்த 2024-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் முதல்முறையாக அறிவிக்கப்பட்டது. சூர்யா வழக்கறிஞராக நடித்திருப்பதால் கதை மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
ஆனால் இந்த படம் ரிலீஸ் தள்ளிப்போய்க் கொண்டே இருக்கிறது. படத்தின் ஓடிடி உரிமை விற்கப்படாமல் இருப்பதே இதற்கு காரணம் என கூறப்படுகிறது. இதற்கிடையே, இந்தியா-நியூசிலாந்து இடையேயான டி20 ஓவர் உலகக் கோப்பை பைனல் போட்டியில், ‘கருப்பு’ படத்தின் இயக்குனர் ஆர்.ஜே. பாலாஜி வர்ணனையாளராக பங்கேற்றிருந்தார். அவர் போட்டியின் நடுவே நான் எடுத்த கருப்புபடம் எப்போது வெளியாகும் என்று தெரியவில்லை என்று பேசியது இணையத்தில் வைரலானது.
‘கருப்பு’ திரைப்படம் ஏப்ரல் வெளியீடாக வருமென்று கூறப்பட்ட நிலையில் வெளியீடு தள்ளிப்போவதாக இயக்குநர் ஆர்ஜே பாலாஜி தெரிவித்திருந்தார். படம் மே மாதம் வெளியாக வாய்ப்பிருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், ‘கருப்பு’ படத்தின் இரண்டாவது பாடலை நடிகர் சிம்பு பாடியிருப்பதாகவும், விரைவில் பாடல் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. இதனை, உறுதிப்படுத்தும் விதமாக சாய் அபயங்கர் தனது ஸ்டுடியோவில் சிம்புவுடன் எடுத்தப் புகைப்படம் வைரலாகி வருகிறது.