நடன நிகழ்ச்சியில் மகனை அறிமுகப்படுத்திய பிரபு தேவா


நடன நிகழ்ச்சியில் மகனை அறிமுகப்படுத்திய பிரபு தேவா
x
தினத்தந்தி 26 Feb 2025 6:05 PM IST (Updated: 26 Feb 2025 6:15 PM IST)
t-max-icont-min-icon

நடிகர் பிரபு தேவா சென்னையில் நடைபெற்ற நடன நிகழ்ச்சியில் தன்னுடைய மகன் ரிஷி ராகவேந்தர் தேவாவை அறிமுகம் செய்து வைத்தார்.

சென்னை,

1989-ல் வெளியான 'இந்து' திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானவர் பிரபு தேவா. இவர் "காதலன், லவ் பேர்ட்ஸ், மிஸ்டர் ரோமியோ" என பல்வேறு படங்களில் நடித்து, ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். 30 ஆண்டுகால சினிமா வாழ்க்கையில் தனக்கென்று தனி அடையாளத்தை உருவாக்கி வைத்துள்ளார். நடனத்தில் சிறந்த பங்களிப்பு அளித்ததற்காக 2019-ம் ஆண்டு பத்ம ஸ்ரீவிருது பெற்றுள்ளார்.

இதற்கிடையில், பிரபுதேவாவின் நடன நிகழ்ச்சி சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான இளைஞர்கள் பங்கேற்று, மிகுந்த உற்சாகத்துடன் நடன நிகழ்ச்சியை கண்டு களித்தனர். அவர்களை ஆச்சரியப் படுத்தும் வகையில், பிரபுதேவா அசாத்தியமாக நடனமாடினார்.

இதில், நடிகர்கள் தனுஷ், வடிவேலு, எஸ். ஜே. சூர்யா மற்றும் இயக்குநர் ஷங்கர், தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் உள்பட பல திரைப்பிரபலங்கள் கலந்துகொண்டனர். ரவுடி பேபி பாடலுக்கு நடிகர் தனுஷும் , காத்தடிக்குது பாடலுக்கு நடிகர் எஸ். ஜே. சூர்யாவும் பிரபு தேவாவுடன் இணைந்து நடனமாடியது பலரையும் கவர்ந்தது.

மிக பிரம்மாண்டமாக நடைபெற்ற நடன நிகழ்ச்சியின் மேடையில் பிரபுதேவா தனது மகன் ரிஷி ராகவேந்தர் தேவாவை சினிமாவிற்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார். தன் மகனை அறிமுகப்படுத்தியது குறித்தும், அவரைத் தொடர்ந்து அவரின் மகனும் நடனத்தின் பக்கம் வருவது குறித்தும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார் பிரபு தேவா. அதில், "எனது மகன் ரிஷி ராகவேந்திரா தேவாவை அறிமுகப்படுத்துவதில் பெருமைகொள்கிறேன். முதல் முறையாக இந்த மேடையில் நாங்கள் இதை பகிர்ந்துள்ளோம். இது நடனத்தையும் தாண்டிய ஒன்றாகும். மரபு, பேரார்வம் மற்றும் பயணம் தற்போது தொடங்கியிருக்கிறது" என பதிவிட்டிருக்கிறார்.

1 More update

Next Story