தயாரிப்பாளர்கள் சங்கம் விஜய் ஆண்டனி, விஜய்சேதுபதி மீது நடவடிக்கை?

தயாரிப்பாளர்கள் சங்கம் விஜய் ஆண்டனி, விஜய்சேதுபதி மீது நடவடிக்கை?

விஜய் ஆண்டனி, விஜய்சேதுபதி மீது தயாரிப்பாளர்கள் சங்கம் நடவடிக்கை எடுக்கபடுமா என தகவல் வெளியாகி உள்ளது.
Published on

பெரிய படங்களால் சிறுபட்ஜெட் படங்களின் வசூல் கடந்த காலங்களில் பாதித்தது. புதுமுக நடிகர்கள் படங்களை திரையிட தியேட்டர்கள் கிடைப்பதும் சிரமமாக இருந்தன. இதனால் தயாரிப்பாளர்கள் சங்கமே படங்கள் வெளியாகும் தேதிகளை முடிவு செய்து வாரம் தோறும் தேதிகளை ஒதுக்கீடு செய்து கொடுத்தது.

விஜய் ஆண்டனி நடித்த திமிரு புடிச்சவன் படத்தை தீபாவளிக்கு வெளியிட சங்கத்தில் தேதி ஒதுக்கினர். ஆனால் அந்த படத்தை தீபாவளிக்கு திரையிடாமல் ஒரு வாரம் கழித்து திரையிட்டனர். இதனால் அதே தேதியில் வெளியான சிறிய படங்களின் வசூல் பாதித்ததாக அந்த படங்களின் தயாரிப்பாளர்களான நடிகர் உதயா, ஆர்.கே. சுரேஷ் ஆகியோர் குற்றம் சாட்டி தயாரிப்பாளர்கள் சங்க செயற்குழு உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தனர்.

இதனால் விஜய் ஆண்டனி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. தயாரிப்பாளர் சங்கத்தில் அனுமதி பெறாமல் விஜய் ஆண்டனி படங்களில் திரைப்பட தொழிலாளர்கள் பணியாற்ற கூடாது என்று பெப்சிக்கு பட அதிபர்கள் சங்கம் கடிதம் அனுப்பி இருப்பதாக கூறப்படுகிறது.

இதுபோல் விஜய் சேதுபதி நடித்துள்ள சீதக்காதி படத்தை டிசம்பர் 14-ந்தேதி திரையிட சங்கம் தேதி ஒதுக்கி இருந்தது. ஆனால் அந்த படத்தை டிசம்பர் 21-ந்தேதி ரிலீஸ் செய்வதாக படக்குழு அறிவித்து உள்ளது. இதனால் விஜய் சேதுபதி மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்க செயற்குழுவில் வற்புறுத்தப்பட்டு உள்ளது.


X

Daily Thanthi
www.dailythanthi.com