

சென்னை,
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 68-ஆவது பொதுக்குழு கூட்டம் தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது. இதில் உரையாற்றிய நடிகர் சங்கத்தின் பொருளாளர் கார்த்தி, நடிகர் சங்க கட்டடத்துக்கு நடிகர் விஜய் ஒரு கோடி ரூபாய் நிதி கொடுத்துள்ளதாக கூறினார்.
மேலும் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளதால், நடிகர் சங்க கட்டடத்தை கட்டுவதன் சுமை அதிகரித்துள்ளதாக கார்த்தி தெரிவித்தார். கடன் தர 50 சதவீத வைப்பு நிதி வைக்க வேண்டும் என வங்கி வலியுறுத்தியதாகவும், அதனை திரட்டுவதற்கு 4 மாதம் ஆனதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சென்னையில் எந்த திருமண மண்டபத்திலும் இல்லாத அளவில் நடிகர் சங்க கட்டிடத்தில் 100 கார்கள் பார்க்கிங் செய்யும் வசதி உள்ளதாகவும் கார்த்தி தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், நடிகர் சங்கத்தின் கடனை அடைக்க நடத்தப்படும் கலை நிகழ்ச்சியில் நடிகர்கள் ரஜினி, கமல் சேர்ந்து கலந்து கொள்வதாக உறுதியளித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.