"பாபநாசம் படத்தில் ரஜினிதான் ஹீரோவாக நடிக்க வேண்டியது..." - இயக்குநர் ஜீத்து ஜோசப் ஓபன் டாக்

"திரிஷ்யம்" படத்தின் தமிழ் ரீமேக் பாபநாசம் என்ற பெயரில் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியானது.
சென்னை,
மலையாளத்தில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 2013-ம் ஆண்டு வெளியாகி ஹிட் அடித்த படம் "திரிஷ்யம்". இப்படம் இந்தியாவில் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என பல்வேறு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது மட்டுமின்றி சீனா, கொரியா போன்ற உலக மொழிகளிலும் ரீமேக் ஆனது.
இப்படத்தின் தமிழ் ரீமேக் பாபநாசம் என்ற பெயரில் 2015-ல் வெளியானது. இதில் கமல்ஹாசன், கவுதமி, நிவேதா தாமஸ் ஆகியோர் நடித்திருந்தனர். மலையாளத்தை போல் தமிழிலும் இப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.
இந்த நிலையில், திரிஷ்யம் படத்தின் தமிழ் ரீமேக்கான பாபநாசம் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்காதது ஏன் என்பதற்கு இயக்குனர் ஜீத்து ஜோசப் விளக்கம் கொடுத்துள்ளார். அதாவது, "பாபநாசம் படத்திற்கு ரஜினிகாந்த்தான் முதல் தேர்வாக இருந்தார், ஆனால் படத்தில் போலீஸ் தாக்குவது போன்ற காட்சிகள் அவரது ரசிகர்களுக்குப் பிடிக்காது என நினைத்தேன், இதற்கிடையே கமல் இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார், இதை அறிந்த ரஜினிகாந்த், "சூப்பர்! வாழ்த்துகள்!" என பெரிய மனதுடன் அவருக்கே உரித்தான பாணியில் கூறி எங்களை வாழ்த்தினார்" என்று தெரிவித்துள்ளார்.






