

சென்னை,
நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகி வரும் 'ராமாயணம்' திரைப்படத்தின் முதல் பாகத்தில், தானும் ரன்பீர் கபூரும் இணைந்து நடிக்கும் காட்சிகள் ஏதும் இல்லை என்பதை நடிகர் யாஷ் உறுதிப்படுத்தியுள்ளார்.
முதல் பாகத்தில் ராமர் மற்றும் ராவணன் ஆகிய இருவரது பயணங்களும் தனித்தனியாக காட்டப்பட உள்ளன. ராமர் தனது ராஜ்ஜியத்திலும், ராவணன் தனது ராஜ்ஜியத்திலும் ஆட்சி செய்வதால், இருவரும் திரையில் ஒன்றாகத் தோன்றும் காட்சிகள் இல்லை என தெரிகிறது. ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ராமர்-ராவணன் இடையிலான மோதல் காட்சிகள் இரண்டாம் பாகத்தில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படத்தில் சாய் பல்லவி சீதையாக, சன்னி தியோல் அனுமானாக, ரவி துபே லட்சுமணராக நடிக்கின்றனர். ஏ.ஆர். ரகுமான் மற்றும் ஹான்ஸ் ஜிம்மர் ஆகியோர் இசையமைக்கின்றனர். ‘ராமாயணம்: பாகம் 1’ வருகிற தீபாவளிக்கும் இரண்டாம் பாகம் அடுத்தாண்டு தீபாவளிக்கும் வெளியாக உள்ளன.